நாக்பூர் : டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அண்மை காலமாக கடுமையாக தடுமாறினார். நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் 93 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் 190 ரன்களும் எடுத்து விராட் கோலி தடுமாறி வருகிறார்.
இந்த நிலையில் விராட் கோலிக்கு மிகவும் பிடித்த ஃபார்மட்டான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தற்போது தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவார் என பல முன்னாள் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.

விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இந்திய அணி வெற்றி பெற மிகப்பெரிய வாய்ப்பு தரும். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி ஒரு மகத்தான சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விராட் கோலி 360 ரன்கள் குவித்தால் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 1700 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.
360 ரன்கள் என்றால், விராட் கோலி இந்த தொடரில் இரண்டு மிகப்பெரிய 2 சதம் அடிக்க வேண்டும்.எனினும் விராட் கோலி இந்த தொடரில் 293 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்க முடியும். கிறிஸ் கெயில், இங்கிலாந்துக்கு எதிராக 1632 ரன்கள் எடுத்துள்ள நிலையில் விராட் கோலிக்கு 293- ரன்கள் தேவைப்படுகிறது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சங்ககாரா 1625 ரன்கள் உடனும் விவியன் ரிச்சர்ட்ஸ் 1619 ரன்கள் உடனும், ரிக்கி பாண்டிங் 1598 ரன்களுடனும், ஜெயவர்த்தனே 1562 ரன்களுடனும் உள்ளனர். இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனி முதல் இடத்தில் இருக்கிறார்.
தோனி 1546 ரன்களுடனும், யுவராஜ் சிங் 1523 ரன்களுடனும், சச்சின் டெண்டுல்கர் 1455 ரன்களுடனும், விராட் கோலி 1342 ரன்களுடனும் உள்ளனர். இந்த பட்டியலில் தோனியை விராட் கோலி அடிக்க வேண்டும் என்றால் 195 ரன்கள் எடுத்தால் போதும். இதனால் இந்த மூன்று சாதனைகளில் விராட் கோலியால் நிச்சயம் ஒரு சாதனையையாவது உடைக்க முடியும்.