அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அரை சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் தான் சதம், அரை சதம் ஆகியவற்றை அடித்தார். அதன் பிறகு இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி தடுமாறினார்.

இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தான் விராட் கோலி சதம் அடித்தார். அதன் பிறகு மற்ற போட்டிகளிலும் தடுமாறினார். இந்த சூழலில் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதனால், அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்த சூழலில் அகமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தாலும், கில்லுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அதிரடியை காட்டினார்.
இங்கிலாந்து அணியில் பந்துவீச்சை தனது லாவகமான ஷாட்டால் அடித்து ரன்களை விராட் கோலி சேர்த்தார். இதன் மூலம் விராட் கோலி 50 பந்துகளில் அரை சதம் அடித்தார். விராட் கோலியின் அதிரடியை பார்த்த ரசிகர்கள் இன்று நிச்சயம் ஒரு சதம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் ரஷீத் வீசிய பந்தை விராட் கோலி அடிக்கும் போது அது விக்கெட் கீப்பிரிடம் கேட்ச் ஆனது. இதன் மூலம் 55 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 52 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் சரிவில் இருந்த இந்திய அணி மீண்டது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி இருப்பது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.