நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் இன்று நாக்பூரில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "எங்கள் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையுடன் இருக்கின்றார்கள்".

"இந்த ஒருநாள் போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். ஜோ ரூட் அணிக்கு திரும்பி இருப்பது மிகப்பெரிய பலமாக பார்க்கின்றோம். பயிற்சியாளர் மெக்குல்லம் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார்.
இந்தியா போன்ற பலமான அணியை நாங்கள் எதிர்கொள்கிறோம்".
"எனவே இது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். நாங்கள் மூன்று வேகப் பந்துவீச்சாளர், ஒரு சுழற் பந்துவீச்சாளருடன் விளையாடுகிறோம் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, நாங்கள் இந்த ஆட்டத்தில் முதலில் பந்து வீச தான் முடிவு செய்தோம்".
"எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டிய விஷயத்தை சரியாக செய்தால் வெற்றி கிடைக்கும். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும். ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு எங்களுக்கு நிறைய ஓய்வு கிடைத்தது. இதை புதிய தொடக்கமாக நாங்கள் பார்க்கிறோம்".
"சமீப காலமாக நாங்கள் ஒரு நாள் கிரிக்கெட் அதிகமாக விளையாடவில்லை. எனவே இந்த போட்டிகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றேன். இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்கவில்லை. நேற்று பயிற்சி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவருக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்திய ஒரு நாள் அணியில் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள்" என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.