ஐதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அனி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் 190 ரன்கள் முன்னிலை பெற்ற போது, சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும். 231 ரன்கள் இலக்கை சேஸிங் செய்ய முடியாமல் இந்திய அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் 196 ரன்களை விளாசிய இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஆலி போப் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், எங்கு தவறு நடந்தது என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. 190 ரன்கள் முன்னிலை பெற்ற போது, ஆட்டம் எங்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக நினைத்தோம். ஆனால் போப் ஆட்டம் மாற்றிவிட்டது. வெளிநாட்டு பேட்ஸ்மேன்களால் ஆடப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் இன்று. போப் ஆட்டம் சிறப்பாக அமைந்தது.
பவுலிங்கிற்கு பின் நாங்கள் எந்த லெந்தில் வீசினோம் என்று சோதனை செய்தேன். நாங்கள் சரியான லெந்தில் தான் வீசினோம். பவுலர்களின் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்பட்டன. ஆனால் போப் போன்ற வீரர் இப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது, நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஒட்டுமொத்த அணியாகவே நாங்கள் தோல்வியடைந்தோம்.
பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் ஆட்டத்தை 5வது நாளுக்கு எடுத்து செல்வார்கள் என்று நினைத்தேன். ஏனென்றால் அடுத்த நாளிற்கு ஆட்டம் சென்றால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். டெய்லண்டர்கள் மிகச்சிறப்பாக போராடினார்கள். நாங்கள் தொடக்கத்தில் அட்டாக் செய்திருக்க வேண்டும். அதனை செய்ய தவறிவிட்டதாக தெரிவித்தார்.