ஐதராபாத்: விராட் கோலியின் இடத்திற்கு அனுபவ வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை தேர்வு செய்வது ஏன் என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரேயொரு முக்கிய வேகப்பந்துவீச்சாளரோடு, 3 ஸ்பின்னர்களை இங்கிலாந்து அணி களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் இந்திய மைதானங்களின் சவாலை இங்கிலாந்து ஏற்றுள்ளதாகவே தெரிகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே விவாதமாக உள்ளது. இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து ரோகித் சர்மா பேசுகையில், விராட் கோலியின் இடத்தை நிரப்ப முதலில் அனுபவ வீரர்களை தேர்வு செய்யலாம் என்று ஆலோசித்தோம்.
ஆனால் ஏராளமான இளம் வீரர்கள் திறமையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு சொந்த மண்ணில் வாய்ப்பு வழங்கவில்லை என்றால், வேறு எங்கு வாய்ப்பு வழங்க முடியும் என்று ஆலோசனை மேற்கொண்டோம். அனுபவ வீரர்களை தேர்வு செய்யாமல் இருப்பது மிகவும் கடினமான முடிவு தான். ஏனென்றால் அத்தனை ஆயிரம் ரன்களை குவித்து, அளவில்லா அனுபவத்துடன் இருக்கிறார்கள். அதனால் அவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுப்பதே கடினமாக இருந்தது.
அதேபோல் சில திறமையான வீரர்களை இந்திய அணிக்குள் கொண்டு வர முடிவு செய்தோம். அவர்களுக்கு சாதகமான மைதானங்களில் வாய்ப்பு வழங்கும் போது, அவர்களால் அதிக நம்பிக்கையுடன் ரன்களை சேர்க்க முடியும். என்னை பொறுத்தவரை எந்த அனுபவமும் இல்லாமல் ஒரு இளம் வீரரை நேரடியாக வெளிநாட்டு மண்ணில் களமிறக்க கூடாது. அதன் காரணமாகவே விராட் கோலியின் இடத்தை இளம் வீரர்களை விளையாட வைக்கலாம் என்று நினைத்தோம்.
என்னை பொறுத்தவரை எப்போதெல்லாம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிகிறதோ, அப்போது கட்டாயம் வாய்ப்பை அளிக்க வேண்டும். இந்த போட்டியை பொறுத்தவரை எதிரணி எந்த வகையான ஆடுகிறது என்பதை பற்றி சிந்திக்கவில்லை. எங்களின் தயாரிப்புகள் மற்றும் ஆட்டத்தின் மீது தான் எங்களின் கவனம் உள்ளது. எதிரணியை பற்றி கவலையில்லை என்று தெரிவித்துள்ளார்.