லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இந்தியாவின் தடுமாற்றத்துடன் முடிவடைந்தது. 193 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில், கடைசி ஓவரில் நைட்வாட்ச்மேன் ஆகாஷ் தீப்-க்கு ஸ்டிரைக் கொடுத்த கே.எல். ராகுலின் முடிவு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசினார். அப்போது களத்தில் இருந்த கே.எல். ராகுல், அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஒரு ரன் எடுத்து, நைட்வாட்ச்மேனாக களமிறங்கியிருந்த ஆகாஷ் தீப்பிற்கு ஸ்டிரைக் கொடுத்தார். ஆனால், அவர் சிங்கிள் எடுத்ததால், அடுத்த பந்தை சந்தித்த ஆகாஷ் தீப், பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதை அடுத்து அனுபவம் வாய்ந்த ராகுல், கடைசி சில பந்துகளை தானே எதிர்கொண்டு விக்கெட்டைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்பது சில ரசிகர்களின் வாதமாக உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரு நாளின் ஆட்டம் முடியவிருக்கும் தருவாயில், பந்துவீச்சிற்கு சாதகமான சூழல் நிலவும்போது, முக்கிய பேட்ஸ்மேன்களைப் பாதுகாப்பதற்காக கீழ் வரிசை பேட்ஸ்மேன்களைக் களமிறக்குவது வழக்கம். இவர்களே 'நைட்வாட்ச்மேன்' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் முக்கியப் பணி, அந்த நாளின் மீதமுள்ள பந்துகளை எதிர்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்வதே ஆகும். ஆகாஷ் தீப் தனது பணியைச் செய்ய முற்பட்டாலும், ராகுலின் தவறான கணிப்பால் அவர் ஆட்டமிழக்க நேரிட்டது.
இந்த நிகழ்வால், இந்திய அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது. போட்டியின் கடைசி நாளான இன்று, வெற்றிக்கு இன்னும் 135 ரன்கள் தேவைப்படும் நிலையில், கைவசம் 6 விக்கெட்டுகளே உள்ளன. ராகுலின் இந்த முடிவு போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.