டெல்லி : முதுகில் ஏற்பட்ட காயத்துடன் ரஞ்சி டிராபி தொடரில் 91 ரன்களை விளாசி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சீனியர் வீரரான புஜாரா.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்களான சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் சொதப்பலான ஆட்டத்தை விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மட்டுமல்லாமல், கடைசியாக ஆடிய 10 இன்னிங்ஸ்களிலும் இரு வீரர்களுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட இவர்கள் இருவராலும் அடிக்க முடியவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே இருவரின் இடமும் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக ரஹானே விளையாடிய போது, எந்த விளக்கமும் கொடுக்காமல் ரஹானேவை நீக்கிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ அணிக்குள் கொண்டு வந்தது.
10 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக இருவருக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தும் இதுவரை ஒரு இன்னிங்ஸில் கூட சோபிக்கவில்லை. இதனால் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் புஜாராவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் புஜாரா தரமான சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
சர்வீஸஸ் அணிக்கு எதிரான போட்டியின் 3வது நாளின் போது முதுகு வலி காரணமாக பேட்டிங்கின் போதே சில மணி நேரம் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார். ஆனால் அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் மீண்டும் 4வது நாள் ஆட்டத்தில் களமிறங்கினார். காயத்துடன் களமிறங்கியதோடு மட்டுமல்லாமல் 133 பந்துகளில் 91 ரன்களை விளாசி பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இந்திய அணிக்காக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள சீனியர் வீரரான புஜாரா, காயத்துடன் ரஞ்சி டிராபி போட்டியில் களமிறங்கி மீண்டும் தனது ஃபார்மை நிரூபித்துள்ளார். இந்த ரஞ்சி டிராபி தொடரில் மட்டும் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 535 ரன்களை விளாசி இருக்கிறார் புஜாரா. விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா உள்ளிட்டோர் அடுத்தடுத்த போட்டிகளில் கம்பேக் கொடுக்கவில்லை என்றால், அவர்களது இடத்தில் புஜாராவை கொண்டு வர வேண்டும் என்று விவாதங்கள் தொடங்கியுள்ளது.