லண்டன்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் இன்னிங்சில் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பண்ட் தேவை இல்லாமல் ரன் ஓடி ஆட்டமிழந்தார்.
இது தான் போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.ரிஷப் பண்ட் மட்டும் களத்தில் நின்று இருந்தால் நிச்சயம் 100 ரன்களுக்கு மேல் அடித்திருப்பார். இதன் காரணமாக இந்திய அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை கடக்க முடியாமல் போனது.

இந்த சூழலில் ரிஷப் பன்ட் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பந்து ஒன்று அவருடைய கையை தாக்கியது. இதனால் காயமடைந்த அவர் அந்த டெஸ்ட் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. எனினும் பேட்டிங் செய்ய ரிஷப் பண்ட் வந்தார்.
முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்த பந்த் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த தருணத்தில் பண்ட் அடுத்த டெஸ்டில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக நான்காவது டெஸ்ட் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வு இருக்கின்றது.
இதனால் அடுத்த டெஸ்ட் போட்டி அடுத்த புதன்கிழமை தான் தொடங்கும். இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய அணி கேப்டன் கில், ரிஷப் பண்ட் காயம் குறித்து அவர் ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்டார். அதில் எந்த ஒரு அபாயமும் இல்லை என தெரிகிறது. இதனால் பண்ட் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் எந்த ஒரு குழப்பமும் இருக்காது என நம்புகிறேன் என்று கூறினார்.
இதேபோன்று பும்ராவின் உடல் தகுதியை கருத்தில் கொண்டு அவர் இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டியில் தான் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பும்ரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்பினார். இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு அவர் திரும்புவாரா இல்லை ஓய்வு எடுத்துக் கொண்டு கடைசி டெஸ்டில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது ஒரு வாரம் ஓய்வு உள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.இதனால் கம்பீர் என்ன முடிவெடுக்க போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணி கேப்டன் கில், பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா என்பது குறித்து உங்களுக்கு விரைவில் தெரியவரும் என்று பதில் அளித்தார்.