மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் இனி இடம் பெறுவது கடினம் என்ற நிலை உருவாகி உள்ளது.
எனவே, அடுத்து ஜூலை மாதம் துவங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா தலைமையிலான டெஸ்ட் அணியை தேர்வு செய்ய பிசிசிஐ தேர்வுக் குழு திட்டமிட்டு உள்ளது. ஆனால், பும்ரா வேகப் பந்துவீச்சாளர் என்பதால் கேப்டன் பதவியை அளித்தால் அது அவருக்கு கூடுதல் சுமையாக இருக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.

மேலும், பும்ராவுக்கு காயம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அவருக்கு பணிச் சுமையின் காரணமாக அவருக்கு சில போட்டிகளில் ஓய்வு அளிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. ஒரு டெஸ்ட் தொடரின் இடையே பும்ரா காயத்தால் விலகினாலோ, பணிச் சுமை காரணமாக விலகினாலோ அது அணியில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
எனவே, வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் பெயர் முன் வைக்கப்பட்டாலும் அவரை கேப்டனாக நியமிக்க தேர்வுக் குழு விரும்பவில்லை. அதனால், வேறு ஒருவரை கேப்டன் பதவிக்கு தயார் செய்யும் வேலைகள் துவங்கி உள்ளன.
அதற்காகவே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் ஜெய்ஸ்வாலை டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கலாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஓராண்டுக்கு பும்ரா தலைமையில் இந்திய டெஸ்ட் அணி செயல்படும்.
தங்க முட்டையிடும் வாத்தை அறுத்துவிடாதீர்கள்.. பும்ரா குறித்து முகமது கையிப் அறிவுரை
அதன் பின் ஜெய்ஸ்வாலுக்கு பதவி உயர்வு அளித்து கேப்டனாக நியமிக்கலாம் என பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது. 2025 ஜூலை மாதம் நடக்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தான் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஜெய்ஸ்வால் இதற்கு முன் உள்ளூர் அணிகளின் கேப்டனாக அதிக அளவில் செயல்பட்டதில்லை. எனவே, அவருக்கு கேப்டன்சி அனுபவமும் தேவையாக உள்ளது.