மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்தத் தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டார். ஐந்து இன்னிங்சில் விளையாடி மொத்தமாகவே அவர் 31 ரன்கள் தான் சேர்த்திருந்தார்
இதனால் ரோகித் சர்மாவை ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி நிர்வாகம் நீக்கி இருந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி அடுத்ததாக டெஸ்ட் போட்டியில் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி இங்கிலாந்தில் விளையாடுகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு ஐந்து டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடரில் பும்ராவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், பிசிசிஐ இந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பும்ராவை முழுநேர கேப்டனாக நியமிக்கும் முன் பிசிசிஐ ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் பும்ரா விக்கெட்டுகள் எடுப்பதிலும் உடல் தகுதியை பேணி காப்பதிலும் தான் தன்னுடைய முழு கவனத்தை செலுத்த வேண்டும். இதில் அணியை வழிநடத்தும் பொறுப்பை பும்ராவுக்கு வழங்கினால் அது நிச்சயம் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
முக்கியமான சமயத்தில் கேப்டனாக அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என அவர் கூடுதல் உழைப்பை செலுத்துவதன் மூலம் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பும்ராவின் மிக பிரம்மாண்டமான கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரலாம். எனவே தங்க முட்டை இடும் வாத்தை கொன்று விடாதீர்கள் என்று கைஃப் வலியுறுத்தியுள்ளார்.
பும்ரா இதுவரை 45 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 25 வீக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் அவருடைய பந்துவீச்சு சராசரி 19.40 என்ற அளவில் இருக்கிறது. பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி ஒரு வெற்றி இரண்டு தோல்வியை தழுவி இருக்கிறார்.