டெல்லி: டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் நமீபியாவுக்கு எதிராக 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவை இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்திய விதத்தை பற்றி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் ஷர்மா கேள்வி எழுப்பினார். டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில், பும்ரா தனது 4 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 20 ரன்கள் வீழ்த்தி அசத்தினார்.
காய்ச்சலால் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தைத் தவறவிட்ட பும்ரா, நமீபியா போட்டிக்குத் திரும்பினார். எனினும், இன்னிங்ஸின் ஏழாவது ஓவரில்தான் அவர் பந்துவீசத் தொடங்கினார். இந்திய அணி 210 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் இருந்ததால், கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவர்பிளேயில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே ஆகியோரைப் பயன்படுத்தினார்.

பும்ராவை முன்னதாகவே களமிறக்கியிருக்க வேண்டும் என முன்னாள் சிஎஸ்கே வீரர் மோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "பும்ரா பவர்பிளேயில் ஒரு ஓவராவது வீசியிருக்க வேண்டும் என்று இப்போதும் நினைக்கிறேன். அவர் ஒரு ஆட்டத்தைத் தவறவிட்டு வருவதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால், ஒட்டுமொத்தமாக, பவர்பிளேயை முடிப்பதற்கு ஆறாவது ஓவரை அவருக்குக் கொடுத்திருக்கலாம்," என்று தெரிவித்தார்.
ஆட்டத்தின் 17வது ஓவரில் ரூபன் டிரம்ப்ல்மேனை வீழ்த்தி பும்ரா டி20 உலகக் கோப்பை 2026 க்கான தனது முதல் விக்கெட்டை பெற்றார். இருப்பினும், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், இந்தியாவின் இந்த அணுகுமுறை சரியானதே என்றார். இது குறித்து பேசிய அவர், "நீங்கள் ஒரு வலுவான நிலையில் இருக்கும்போது, உங்கள் ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்துவீச்சளர்களை பயன்படுத்தவும், அவர்களுக்குப் பொறுப்பைக் கொடுத்து, அழுத்தத்தின் கீழ் அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை பார்க்கவும் இது ஒரு வாய்ப்பு," என்று ஜாகீர் கான் தெரிவித்தார்.
"இதன் மூலம் சிவம் தூபேவும், ஹர்திக் பாண்டியாவும் புதிய பந்தில் பந்துவீசுவதைப் பார்க்க முடிந்தது. பும்ரா காய்ச்சல் காரணமாக கடந்த ஆட்டத்தைத் தவறவிட்டார், எனவே இது அவருக்குக் கம்பேக் போட்டி. அவரை மெதுவாக அணிக்குள் அனுமதிக்க இதை ஒரு வகையில் அணுக வேண்டும். முதலில், அவர் ஆட்டத்தில் விளையாடியது நல்லது, தற்போது இந்தத் தொடரில் களமிறங்கிவிட்டார்."
"அவரது ரிதம் மேம்படும். இந்தப் போட்டியில், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தூபேவுக்கு ஓவர்கள் வழங்க அணி நிர்வாகம் முன்னுரிமை அளித்தது என்று நான் நினைக்கிறேன்," என்று ஜாகீர் கான் குறிப்பிட்டார். ஹர்திக் பாண்டியாவும் சிவம் தூபேவும் இணைந்து மொத்தமாக 6.2 ஓவர்கள் பந்துவீசி, 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்திய அணி அடுத்து வரும் 15 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.