பெங்களூர் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு தற்போது பலமான நிலையில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தகுதி பெற வேண்டுமென்றால் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை மூன்றுக்கு பூஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும்.
இந்த சூழலில் நியூசிலாந்து அணியும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி பலம் குன்றி காணப்பட்டது. அது மட்டும் இல்லாமல் கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் பங்கு பெறவில்லை.

இந்த சூழலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், ஆடுகளமும் ஈரப்பதமாக இருந்தது. ஆனால் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து மெகா பிழையை செய்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர்.இதனால் 31.2 ஓவர் மட்டுமே எதிர்கொண்ட இந்திய அணி 46 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக ரிஷப் பந்து 20 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியில் ஐந்து வீரர்கள் சோகமான சாதனையை படைத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் மாட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளை வைத்து அசத்தினார்.இந்த நிலையில் இந்தியாவும் அபாரமாக பந்துவீசி நியூசிலாந்தை ஆட்டம் இழக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நியூசிலாந்து அணி அபாரமாக ரன் குவித்து வருகிறது. கேப்டன் டாம் லாத்தம் 15 ரன்களிலும் வில் யங் 33 ரன்களிலும் ஆட்டமிழக்க சிஎஸ்கே வீரர் டிவோன் கான்வே மட்டும் அபாரமாக விளையாடி 105 பந்துகளை எதிர்கொண்டு 91 ரன்கள் ஆட்டம் இழந்தார். ரச்சின் ரவீந்திரா 22 ரன்களிலும் டாரல் மிட்செல் 14 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள்.
இதன் மூலம் 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்த நிலையில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.இதன் மூலம் நியூசிலாந்து அணி தற்போது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 134 ரன்கள் கூடுதலாக அடித்து இருக்கிறது. நாளை நியூசிலாந்து அணி கூடுதலாக ஒரு 200 ரன்கள் அடித்தால் இந்தியா பெறும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதனால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றி வாய்ப்புதான் பிரகாசமாக இருக்கிறது.