பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டமிழந்து வரலாற்றிலே சோகமான சாதனையை படைத்திருக்கிறது. பெங்களூருவில் மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது நாளின்போது வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.
இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்வதற்கு பதிலாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து வரலாற்றுப் பிழையை செய்தார். இதனை அடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி, சர்பராஸ்கான் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 10 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால்,ரிஷப் பந்த் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி இந்திய அணியை கௌரவமான இலக்கிற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தொடக்கவீரர் ஜெய்ஸ்வால் 63 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் ரிஷப் பந்து 49 பந்துகளை எதிர் கொண்டு 20 ரன்கள் சேர்க்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல், ஜடேஜா அஸ்வின் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.குல்தீப் யாதவ் இறுதியில் இரண்டு ரன்களும், சிராஜ் 4 ரன்களும் எடுக்க இந்திய அணி 31.2 ஓவரில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் டிம் சவுதி ஒரு விக்கெட்டும், மாட் ஹென்றி ஐந்து விக்கெட்டும் வில்லியம் ஓ ரூர்க்கி நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்கள்.இதன் மூலம் இந்திய மண்ணில் இந்தியா அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இது என்ற சோகமான சாதனையை ரோகித் படை படைத்திருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா அடித்திருக்கும் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். அடிலெய்டில் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ரன்களில் ஆட்டம் இழந்தது இன்னும் முதலிடத்தில் இருக்கிறது. 1974 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 42 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 46 ரன்களில் ஆட்டம் இருந்திருப்பது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.