பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது மிகப்பெரிய தவறாக தற்போது மாறியிருக்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இந்த போட்டி தொடங்க இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் கூட வீசப்பட முடியவில்லை.
இதனால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முற்றிலும் கைவிடப்பட்டது.இதை அடுத்து இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பெங்களூரு வானிலை மேகமூட்டத்துடன் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.

மழை காரணமாக ஆடுகளமும் ஈரப்பதத்துடன் இருந்தது. இந்த சூழ்நிலையில் பேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம். இதனால் இந்திய அணி டாஸ் வென்றால் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்யும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் யார் பேச்சையும் கேட்காமல் ரோகித் சர்மா தான்தோன்றித்தனமாக டாஸ் வென்றவுடன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனால் நியூசிலாந்து அணியின் அபாரமான வேகப்பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் 10 ரன்களுக்கு இந்தியா மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. வானிலை முன்னேறுவதற்கான வாய்ப்பு இன்று தெரியவில்லை. இந்த சூழலில் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்திருந்தால் நியூசிலாந்து அணியின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தி முன்னிலையில் இருந்திருக்கலாம்.
தற்போது இந்திய அணி தடுமாறி வருகிறது. இந்தியா குறைந்த பட்சம் 200 ரன்களுக்கு மேலாவது எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒருவேளை முதல் இன்னிங்ஸில் இந்திய அணி குறைந்த ஸ்கோரில் ஆட்டம் இழந்தால், அது நியூசிலாந்து அணியின் வெற்றியை பிரகாசமாக்கி விடும்.
பெங்களூர் ஆடுகளத்தில் கடைசி நாளில் பேட்டிங் செய்வது கடினம் என்பதால் ரோகித் சர்மா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால் இந்த சூழலில் பேட்டிங் செய்து பழக ரோகித் நினைத்து இருப்பார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அது தற்போது தவறாக முடிந்து விட்டது.