ராஜ்கோட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் மற்றும் விராட் கோலி ரன் மழை பொழிவார்கள், சிக்ஸர்கள் பறக்கும் என்று எதிர்பார்த்து ராஜ்கோட் மைதானத்திற்கு வந்த ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
நியூசிலாந்து இளம் பந்துவீச்சாளர் கிறிஸ்டியன் கிளார்க் வீசிய பந்துவீச்சுத் தாக்குதலில் இந்திய அணியின் டாப் ஆர்டர் சீட்டுக்கட்டு போல சரிந்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே தடுமாற்றமாக இருந்தது. அதிரடி மன்னன் ரோஹித் சர்மா ரன் எடுக்கவே திணறினார். 38 பந்துகளைச் சந்தித்த அவர், வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்து கிறிஸ்டியன் கிளார்க் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மறுபுறம், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த கையோடு, பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் ஏமாற்றினார். நன்கு செட்டில் ஆனது போல் தெரிந்த அவர், 23 ரன்களில் (29 பந்துகள்) கிறிஸ்டியன் கிளார்க் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். ஸ்ரேயாஸ் ஐயரும் 8 ரன்கள் எடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
இந்தச் சரிவில் இந்திய அணிக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது கேப்டன் சுப்மன் கில்லின் பேட்டிங் மட்டுமே. ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் அதிரடியாக ஆடிய கில், 53 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 56 ரன்கள் விளாசினார். இருப்பினும், ஜேமிசன் பந்துவீச்சில் அவரும் ஆட்டமிழக்க இந்தியா 99 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்து, 118 ரன்களுக்கு 4 விக்கெட் எனத் தடுமாறத் தொடங்கியது.
நியூசிலாந்து பந்துவீச்சாளர் கிறிஸ்டியன் கிளார்க் இந்திய பேட்ஸ்மேன்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். ரோஹித், கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் என முக்கிய 3 விக்கெட்டுகளையும் அவரே வீழ்த்தினார்.
38.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து உள்ளது.அப்போது கே எல் ராகுல் 46 ரன்கள் எடுத்து இருந்தார்.