இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை நாளை 24ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் புனேவில் ஏற்கனவே முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியிருப்பதால், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் அது மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ள முடியும்.

பெங்களூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தது. எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக இந்திய அணி விளையாடினாலும், கே.எல் ராகுல், ஜடேஜா அஸ்வின் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில் பெங்களூர் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் விளாசிய சர்பராஸ்கான் இரண்டாவது டெஸ்டில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கில்லுக்கு பதிலாக சர்பராஸ் கான் களமிறங்கிய நிலையில் தற்போது கில் முழு உடல் தகுதியைப் பெற்று அணிக்கு திரும்பியிருக்கிறார். இதனால் கேஎல் ராகுல் வெளியேறுவாரா? இல்லை சர்பராஸ்கான் வெளியேறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோன்று புனே ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடும் என தெரிகிறது.
அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா இல்லை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் முகமது சிராஜ் கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுக்கவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மாற்றங்களாவது நடக்கும் என தெரிகிறது.
இந்திய பிளேயிங் லெவன் : 1, ரோகித் சர்மா, 2, ஜெய்ஸ்வால், 3, சுப்மன் கில், 4,விராட் கோலி, 5, சர்ஃபராஸ் கான்/கேஎல் ராகுல், 6, ரிஷப் பண்ட், 7, ஜடேஜா, 8. அஸ்வின், 9. குல்தீப் யாதவ்/அக்சர் பட்டேல் , 10. பும்ரா, 11, முகமது சிராஜ்/ ஆகாஷ் தீப்