கவுஹாத்தி: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்று கணிக்கப்பட்ட போதிலும், நியூசிலாந்து அணியை 153 ரன்களுக்குள் இந்திய அணி கட்டுப்படுத்தியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆகியோர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கவுஹாத்தி மைதானம் பொதுவாக ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து அணி பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அந்த எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.

ஹர்ஷித் ராணா வீசிய முதல் ஓவரிலேயே துவக்க வீரர் டெவோன் கான்வே வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவும் 4 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர் பிளே ஓவர்களில் நியூசிலாந்து அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. முதல் 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் டிம் சீஃபர்ட் 12 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணியை கிளென் பிலிப்ஸ் மற்றும் மார்க் சாப்மேன் ஜோடி மீட்கப் போராடியது. இந்த ஜோடி 4வது விக்கெட்டிற்கு 52 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய மார்க் சாப்மேன் 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் கிளென் பிலிப்ஸ் பொறுப்புடன் விளையாடினார். அரைசதத்தை நெருங்கிய அவர், 40 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தபோது ரவி பிஷ்னோய் சுழலில் சிக்கி வெளியேறினார். டேரில் மிட்செல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சு இன்று மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ரவி பிஷ்னோய் நியூசிலாந்து வீரர்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தினார். 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதேபோல் அணிக்குத் திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா தனது துல்லியமான பந்துவீச்சால் மிரட்டினார். 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் அள்ளினார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் மட்டுமே ஏமாற்றம் அளித்தார். அவர் 3 ஓவர்களில் 32 ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி நேரத்தில் கேப்டன் மிட்செல் சான்ட்னர் 27 ரன்கள் எடுத்ததால் அந்த அணி 150 ரன்களைக் கடந்தது. இந்திய அணிக்கு 154 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.