மும்பை : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த சூழலில் ஆறுதல் வெற்றி பெற வேண்டிய உத்வேகத்தில் இந்திய அணி இருக்கிறது. நியூசிலாந்தை பொறுத்தவரை மூன்றுக்குப் பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி,ஜடேஜா, கில் போன்ற வீரர்கள் தொடர்ந்து தடுமாறி வருகிறார்கள்.
முதல் டெஸ்டில் 150 ரன்கள் விளாசிய சர்பராஸ்கான் இரண்டாவது டெஸ்டில் தடுமாறினார். பந்துவீச்சில் அஸ்வின் ஜடேஜா ஆகியோரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பும்ராவும் விக்கெட் எடுக்க தடுமாறினார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மாற்றம் இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது டெஸ்டில் அதிரடியாக நீக்கப்பட்ட கே எல் ராகுல் மற்றும் வாய்ப்பு கிடைக்காத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன துருவ் ஜூரல் ஆகியோர் மூன்றாவது டெஸ்டில் விளையாடுவார்கள் என செய்திகள் வெளியானது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கம்பீர் ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் விளையாடிய வீரர்களை மூன்றாவது டெஸ்டிலும் விளையாடுவார்கள் என்ற முடிவில் இருக்கிறார்கள்.
குறிப்பாக பந்துவீச்சில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிகிறது. ஆகாஷ் தீப்க்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இரண்டாவது டெஸ்டில் சாஃபராஸ் தடுமாறினாலும், மும்பை மைதானத்தில் மிகப் பெரிய ரெக்கார்டுகளை வைததிருப்பதால், 3வது டெஸ்டில் அவருக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும். இதனால் 99% இந்திய அணி எந்த மாற்றமும் செய்யாமல் விளையாடும் என தெரிகிறது.
ரோகித் சர்மாவும் விராட் கோலியும் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியின் தழுவினால் நிச்சயம் பல தலைகள் உருளும் என்பதால் இந்த டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்திருக்கிறது. உத்தேச பிளேயிங் லெவன்- 1. ரோகித் சர்மா, 2, ஜெய்ஸ்வால்,3, சுப்மன் கில், 4,விராட் கோலி, 5, சர்ஃபராஸ் கான், 6, ரிஷப் பண்ட், 7, ஜடேஜா, 8, அஸ்வின், 9, வாசிங்டன் சுநதர், 10, பும்ரா, 11, ஆகாஷ் தீப்/சிராஜ்