மும்பை: 20ஆம் நூற்றாண்டில் முதல்முறையாக இந்திய அணி 43 பந்துகளில் முதல் 5 விக்கெட்டுகளை இழந்து புதிய சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் இப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் 2வது நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து 3வது நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணியின் ஓரூர்க் - அஜாஸ் படேல் கூட்டணி தொடங்கியது.

இவர்கள் கூடுதலாக 3 ரன்கள் சேர்த்த போது, ஜடேஜா பந்தில் அஜாஸ் படேல் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக இந்திய அணியின் வெற்றிக்கு 147 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தனர்.
3வது ஓவரிலேயே மேட் ஹென்றி பந்தில் ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சுப்மன் கில் 1 ரன்னில் போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து வந்த விராட் கோலியும் 1 ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணி 6 ஓவர்களில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து 7வது ஓவரில் ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், சர்ஃபராஸ் கான் 1 ரன்னிலும் வெளியேறினர்.
இதனால் கண் மூடி திறப்பதற்குள் இந்திய அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலமாக இந்திய அணி குறைந்த பந்துகளிலேயே முதல் 5 விக்கெட்டுகளை இழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. வெறும் 43 பந்துகளில் இந்திய அணி முதல் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 61 பந்துகளில் முதல் 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.
இதன் மூலமாக 20ஆம் நூற்றாண்டிலேயே இந்திய அணியின் மோசமான பேட்டிங் சாதனையாக இது அமைந்துள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏற்கனவே மோசமாக விளையாடி வரும் சூழலில், தொடர்ந்து 3வது முறையாக இப்படியோரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.