திருவனந்தபுரம்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி சனிக்கிழமை (ஜனவரி 31) திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 7ஆம் தேதி டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். எனவே, வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. இந்தப் போட்டியில் மழை பெய்யாது என்றாலும், கடலோரப்பகுதி என்பதால் இரவு நேரத்தில் ஒரு சவால் காத்திருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடந்த போட்டியில் இந்திய அணி பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டது. குறைவான பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் மற்றும் இந்திய வீரர் சிவம் துபே ஆகியோர் அந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடினார்கள். அந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வர இந்திய அணி காத்திருக்கிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியாவின் தெற்குப் பகுதியில் இந்த மைதானம் அமைந்துள்ளதால், வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதம் ஆகியவை போட்டியில் முக்கிய பங்கு வைக்கும்.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, திருவனந்தபுரத்தில் வானம் தெளிவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே ரசிகர்கள் எவ்வித இடையூறும் இன்றி முழு போட்டியையும் கண்டு களிக்கலாம். பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை 25 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது கடலோரப் பகுதி என்பதால் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். சுமார் 74 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கக்கூடும். இதனால் வீரர்கள் அதிக வியர்வையினால் சோர்வடைய வாய்ப்புள்ளது. மழை ஆபத்து இல்லாத ஒரு முழுமையான கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். டாஸ் வெல்லும் அணி சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்பது வெற்றிக்கு வித்திடும்.