துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு 25 ஆண்டுகளுக்கு பின் பழி தீர்க்க இந்திய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 2000ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்று, கோப்பையையும் தட்டிச் சென்றது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதனால் மார்ச் 9ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இதனால் நியூசிலாந்து அணியை 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி எதிர்கொள்கிறது. 2000ஆம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி இந்திய ரசிகர்களால் எளிதாக மறக்க முடியாது. குறிப்பாக கங்குலியின் ரசிகர்களால் ஒருநாளும் மறக்க முடியாது.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு கங்குலி - சச்சின் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 141 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் 83 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருந்தாலும் அசாதாரண ஆட்டத்தை ஆடிய கங்குலி 130 பந்துகளில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 117 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
ஆனால் அடுத்த வந்த ராகுல் டிராவிட், வினோத் காம்ப்ளி, யுவராஜ் சிங், ராபின் சிங் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 300 ரன்கள் செல்ல வேண்டிய ஸ்கோர் வெறும் 264 ரன்களுடன் நின்றது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 109 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் பின்னர் வந்த கிறிஸ் க்ரைன்ஸ் - கிறிஸ் ஹாரிஸ் கூட்டணி இந்திய அணியின் கனவில் மண்ணை அள்ளி போட்டது.
கடைசி வரை களத்தில் இருந்த கிறிஸ் க்ரைன்ஸ் 113 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த தோல்வியை 80ஸ் கிட்ஸ் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள். அதேபோல் 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை அடைந்தது. இந்த இரு தோல்விகளுக்கு சேர்த்து வைத்து இந்திய அணி பழிதீர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களின் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.