மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெறவில்லை என்றால், 4 சீனியர் வீரர்களுக்கும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரே கடைசி தொடராக அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. சொந்த மண்ணிலேயே இந்திய அணி முதல்முறையாக ஒயிட் வாஷ் செய்யப்பட்டிருப்பதால், ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதற்கு சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் மோசமான பேட்டிங்கே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த தோல்வி காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி வெல்லவில்லை என்றால், இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. இதனிடையே தோல்விக்கு பின் ரோஹித் சர்மா பேசுகையில், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் தான் எங்களின் கவனம் உள்ளது.
ஆஸ்திரேலியா தொடருக்கு பின் என்ன நடக்கும் என்பதில் கவனம் செலுத்தப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். இதனிடையே பிசிசிஐ தரப்பில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் தோல்வி குறித்து விவாதிக்க போவதாக கூறப்படுகிறது.
ஆனால் நவ.10ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க உள்ளதால், எந்த நடவடிக்கையும் இருக்காது என்று நம்பப்படுகிறது. ஒருவேளை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இழந்து இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட முடியவில்லை என்றால், 4 சீனியர் வீரர்களும் விளையாடும் கடைசி டெஸ்ட் தொடர் அதுவாகவே இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
அதன் ஜூன் மாதம் நடக்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு நிச்சயம் 4 சீனியர்களில் 2 அல்லது 3 வீரர்கள் பயணிக்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ரோஹித் சர்மா 38 வயதை எட்டியுள்ள நிலையில், அஸ்வின் 38 வயதில் இருக்கிறார். விராட் கோலி மற்றும் ஜடேஜா ஃபிட்னஸ் உடன் இருந்தாலும், அவர்களின் ஃபார்மை பொறுத்தே வாய்ப்பு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
ஏனென்றால் ரோஹித் சர்மாவின் இடத்தில் விளையாட அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர். இன்னொரு பக்கம் அஸ்வின் இடத்தில் விளையாட வாஷிங்டன் சுந்தர் தயாராகி திறமையையும் நிரூபித்துவிட்டார். ஜடேஜாவுக்காக சிறந்த மாற்று வீரராக இந்திய மண்ணில் அக்சர் படேல் தயாராகியுள்ளார்.
அதேபோல் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இளம் வீரர்களை கொண்டு பயணிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் சொந்த மண்ணில் 4 சீனியர் வீரர்களும் கடைசியாக இணைந்து விளையாடிவிட்டதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 4 சீனியர் வீரர்களுக்கும் அக்னி பரீட்சையாகவே அமைந்திருப்பதாக விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.