மும்பை : இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வெளிநாட்டு அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது என்றால் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஒரு மைதானத்தை தயாரித்துவிட்டு, அதில் எளிதாக வெற்றி பெறும். இப்படித்தான் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வென்றது.
இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டின் ஆதிக்கத்தால் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட தொடங்கி விட்டார்கள். சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொண்டு விளையாடுவது என்பதையே மறந்துவிட்டார்கள்.

இதனால் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள். இது தான் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே, பொதுவாக ஆடுகளம் வெளிநாட்டு வீரர்களை தான் பயமுறுத்தும்.
ஆனால் தற்போது இந்திய அணி வீரர்களை அது பயமுறுத்தி இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் ஒரு செஷன் கூட நிலைத்து நின்று ஆடவில்லை. பெங்களூரில் ஒரு இன்னிங்ஸ் மட்டும் அப்படி விளையாடி இருந்தார்கள். மற்ற ஐந்து இன்னிங்ஸில் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பியதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
ஒரு செஷன் விளையாட முடியவில்லை என்றால் இந்திய அணி எந்த விதத்தில் பேட்டிங் செய்வது என்பதை பார்க்கலாம். இந்திய அணி டெஸ்ட் தொடரை எப்படி எதிர்கொண்டு விளையாடுகிறது என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும். எப்போதெல்லாம் நியூஸ்லாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் நன்றாக விளையாடுகிறார்கள்.
இந்த ஆடுகளத்தில் எப்படி பந்து வீச வேண்டும்?எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது நன்றாக நியூசிலாந்துக்கு தெரிந்திருக்கிறது. இந்த வெற்றிக்கு நாம் நியூசிலாந்தை நிச்சயமாக பாராட்ட வேண்டும். எந்த ஆடுகளத்தில் விளையாடுகிறோமோ அதற்கு இந்தியா மரியாதை கொடுக்க வேண்டும். இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதைப் பார்த்து ரன்கள் சேர்க்க வேண்டும் என்று அணில் கும்பலை தெரிவித்துள்ளார்.