மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகி படுமோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணி அடுத்து நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரில் சீனியர் வீரர்கள் சாதிக்கவில்லை என்றால்,அவர்கள் அதிரடியாக நீக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சொந்த மண்ணில் நியூசிலாந்தை கூட எதிர்கொள்ள முடியாத இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று அச்சம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் இந்த தோல்வியை ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட், கிண்டல் செய்து இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஒரு பெரிய மிருகத்தை தூக்கத்திலிருந்து இந்த தோல்வி நிச்சயம் எழுப்பி இருக்கும். மூன்றுக்கு பூஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றதை விட தற்போது தோல்வியை தழுவி இருப்பதன் மூலம் அவர்கள் சரியாக விளையாட வேண்டும் என்று யோசிப்பார்கள்.
அதே சமயம் இந்திய அணி வீரர்களின் நம்பிக்கை நிச்சயம் உருக்குலைந்திருக்கும். சில வீரர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் விளையாடி இருக்கிறார்கள். சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவில் விளையாடுவது புதியது. எனவே ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று நிச்சயம் அவர்களுக்கு தெரியாது.
எனினும் இந்திய அணி அடைந்த தோல்வி நிச்சயம் எங்களுக்கு சாதகமான ஒரு முடிவாக தான் அமைந்திருக்கிறது. எனினும் அது பற்றி நாம் அதிகம் உற்று நோக்கி படிக்க தேவையில்லை. நியூசிலாந்து அணி வீரர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார்கள். தற்போது இந்திய தொடருக்காக நான் சரியான முறையில் தயாராகி வருகிறேன்.
நான் பந்து வீசும் முறை எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்திய தொடர் என்பது எங்களுக்கு மிகவும் மிகப்பெரிய தொடராகும். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடுவது ஆசஸ் தொடருக்கு சமமாக நான் கருதுகிறேன். ஒவ்வொரு போட்டிக்கும் பெரிய அளவு பார்வையாளர்கள் வருவார்கள் என்று ஜோஸ் ஹேசல்வுட் கூறினார்.