புனே: புனே மைதானத்தில் நடக்கவுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் பிளாக் சாயில் பிட்ச் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் 2வது டெஸ்டிலும் இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றிருப்பதால், நியூசிலாந்து வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட, அவர்களால் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும்.

இதனால் அதற்கான திட்டங்களை நியூசிலாந்து வீரர்கள் உருவாக்கி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனை விளையாட வைக்கவும் நியூசிலாந்து அணி நிர்வாகம் தயாராகி வருகிறது. இந்திய மைதானங்களில் விளையாடிய அனுபவம் இருப்பதால், வில்லியம்சன் இணைந்து அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள புனே மைதானத்தில் தயாராகியுள்ள பிட்ச் குறித்து தெரிய வந்துள்ளது. அதன்படி, 2வது டெஸ்ட் போட்டிக்கு பிளாக் சாயில் பிட்ச் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிளாக் சாயில் பிட்சை பொறுத்தவரை பவுன்ஸ் குறைவாக இருக்கும் என்பதோடு, ஸ்பின்னர்களுக்கு முழுமையாக சாதகமளிக்கும். அதேபோல் ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் பவுலர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டியின் அடுத்தடுத்த நாட்களில் பிட்ச் இன்னும் ஸ்லோவாக மாறும். இதனால் 3வது நாள் ஆட்டத்திற்கு பின் முழுமையாக ஸ்பின்னர்களின் கட்டுப்பாட்டில் தான் ஆட்டம் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் புனே மைதானத்தில் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. அதில் 2017ல் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இதனால் 2வது டெஸ்ட் போட்டியிலும் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் இந்திய அணியின் தரப்பில் அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என்று 3 வீரர்கள் இருக்கின்றனர். இவர்கள் மூவரும் இந்திய அணிக்காக களமிறங்கும் பட்சத்தில், நிச்சயம் விக்கெட் வேட்டை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆட்டத்தின் வெற்றி தோல்வி என்பது முதலில் பேட்டிங் செய்யும் அணியை பொறுத்த அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.