புனே: 2012ஆம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், அந்த சாதனையை ரோஹித் சர்மா காப்பாற்றுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
2012ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. அதுதான் இந்திய அணி கடைசியாக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வியாகும். இதன்பின் இந்திய அணி தொடர்ச்சியாக இந்திய மண்ணில் நடந்துள்ள 18 டெஸ்ட் தொடர்களில் வென்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் கேப்டன்களே, இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஐசிசி தொடரை வெல்வதற்கு சமமானதாகும் என்று கூறியுள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் இந்திய அணி சொந்த மண்ணில் மொத்தமாகவே 5 போட்டிகளை தான் தோற்றுள்ளது. இதனால் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்ததாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் இத்தனை சாதனைகளையும் நியூசிலாந்து அணி அசைத்து பார்த்துவிட்டது. பெங்களூர் மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து புனே மைதானத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 156 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டாகியுள்ளது.
இதன் மூலமாக நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றதுடன், 2வது இன்னிங்ஸில் அதிரடியாக தேநீர் இடைவேளை வரை 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் முன்னிலை 200 ரன்களுக்கு அருகில் சென்றுவிட்டது. நியூசிலாந்து அணியை 150 ரன்களுக்குள் இந்திய அணி ஆல் அவுட் செய்யவில்லை என்றால், இந்திய வீரர்களின் பாடு திண்டாட்டம் தான்.
அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டன்சி மோசமாக இருந்து வருகிறது. பவுலிங் மாற்றங்கள், ஃபீல்டிங் வியூகம் என்று ரோஹித் சர்மா எடுக்கும் கள முடிவுகள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தலையை விட்டுவிட்டு வாலை பிடிக்கும் கதையாக ரோஹித் சர்மா தாமதமாகவே முடிவுகளை எடுத்து வருகிறார். இதனால் நியூசிலாந்து அணி புதிய வரலாறு படைப்பதை ரோஹித் சர்மா தடுத்து நிறுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.