துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாய ஆட்டமாக கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி முடிவடைந்த உடன் ஒருநாள் இடைவெளியில் மீண்டும் செவ்வாய்க்கிழமை அரையிறுதி போட்டி நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பல மாற்றங்கள் நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோர் காயம் அடைந்தார்கள்.

இதனால் அவர்களுக்கு பதில் இந்த தொடரில் இடம்பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் துணை பயிற்சியாளர் டென்டோசேட், வீரர்களுக்கு ஓய்வை வழங்காமல் மாற்றுத்திட்டத்தை கையாளப் போவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "ஆறு நாட்கள் எங்களுக்கு இடைவெளி இருந்தது. இதில் நாங்கள் இரண்டு கடினமான பயிற்சி முகாம்களை நடத்தினோம். ஒரே நாள் இடைவெளியில் அரையிறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இதனால் எங்களுடைய வீரர்கள் அனைவரும் முழு உடல் தகுதியுடன் இருக்க நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்."
"அதே சமயம் ஏற்கனவே ஆறு நாட்கள் ஓய்வில் இருந்ததால் மேலும் இரண்டு நாட்கள் ஓய்வு தேவை இல்லை என்ற முடிவில் இருக்கின்றோம். ஓய்வு தருகிறேன் என எங்கள் அணியின் பேலன்ஸை நாங்கள் சிதைக்க விரும்பவில்லை. அதேசமயம் எங்கள் பவுலர்கள் நல்ல உடல் தகுதியுடனும் இருக்க வேண்டும்."
"இதற்காக நாங்கள் ஒரு திட்டத்தை கையாள போகிறோம். எங்கள் அணியில் உள்ள பவுலர்கள் அனைவருக்கும் முடிந்தவரை 10 ஓவர்கள் வழங்காமல் ஐந்து ஆறு ஓவர் வரை நிறுத்த முடிவு எடுத்திருக்கின்றோம். இதற்கான சூழல் ஏற்பட்டால் பவுலர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த போகிறோம். ஏனென்றால் 36 மணி நேரத்தில் தொடர்ந்து இருபது ஓவர்கள் வீசுவது என்பது கடினமாகும். இதனால் களத்தில் பவுலர்கள் நிற்கும் போது அவர்களை பெரிய அளவு பணி சுமத்த நாங்கள் விரும்பவில்லை."
"இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மாவும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கின்றார். நியூசிலாந்து அணியில் பல சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனவே எங்கள் சுழற் பந்துவீச்சாளர்களுக்கும், அவருடைய சுழற் பந்துவீச்சாளருக்கும் இடையிலான போட்டியாக தான் இது இருக்கும். அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருப்பது நல்ல விஷயம் தான். ஆடுகளத்தை பார்க்கும்போது 280 -290 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என நினைக்கிறேன் என்று டென் டோசேட் கூறியுள்ளார்.