துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. இரண்டு அணிகளுமே ஏற்கனவே அரையிறுதிக்கு சென்ற நிலையில் இந்த போட்டி ஒரு சம்பிரதாய ஆட்டமாக தான் நடைபெறும்.
இந்த சூழலில் அரையிறுதி போட்டிக்கு முன்பு வெற்றியுடன் செல்ல வேண்டிய உத்வேகத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேஎல் ராகுல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் எந்த மாதிரியான அணியை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் இது குறித்து பேசிய அவர், "அனைத்து வீரர்களும் நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறார்கள். சிலருக்கு சில பிரச்சனை இருந்தது. ஆனால் போட்டியை மிஸ் செய்யும் அளவுக்கு யாருக்கும் காயம் இல்லை. சனிக்கிழமை நடைபெறும் பயிற்சிக்கு பின்பு தான் எந்த வீரர்கள் விளையாட போகிறார்கள் எனத் தெரியும். ஜிம்மில் அனைத்து வீரர்களும் பயிற்சியில் பங்கேற்றார்கள்."
"இதனால் அணியில் காயம் தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை என நினைக்கின்றேன். நான் முடிவுகளை எடுக்கும் குழுவில் இல்லை. அதை நான் அதிர்ஷ்டமாக தான் நினைக்கின்றேன். தற்போது நாங்கள் பலமான நிலையில் இருக்கின்றோம். இதனால் வாய்ப்பு கிடைக்காத சில வீரர்களுக்கு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கொடுக்க தோன்றுவது இயல்புதான்."
"ஆனால் அது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை. அரை இறுதிக்கு முன்பு எங்களுக்கு ஒரு நாள் தான் ரெஸ்ட் இருக்கிறது. தற்போது நாங்கள் ஆறு நாட்கள் பிரேக்கிற்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போகிறோம். எனவே அரை இறுதிக்கு முன்பு அனைத்து வீரர்களும் களத்தில் நின்று விளையாடி இருக்க வேண்டும்."
"இதுதான் என்னுடைய கருத்து. ஆனால் இதற்கு நேர் மாறாக கூட நாளை நடக்கலாம். அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ரிஷப் பண்டை அணியை விட்டு விலக்கி வைப்பது என்பது முடியாத காரியம். நான் பண்ட் போல் விளையாட மாட்டேன். இதுபோல் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரும் மற்றவர்கள் போல் விளையாட மாட்டார்."
"ஒவ்வொரு வீரர்களும் அணிக்கு என்ன செய்வார்கள் என்பதை பார்த்து தான் பிளேயிங் லெவனை தேர்வு செய்கிறார்கள். ஆடுகளம் தோய்வாக இருக்கிறது. இதனால் பேட்டர்ஸ் சிங்கில்ஸ் எடுக்கவே கஷ்டப்படுகிறார்கள். துபாய் ஆடுகளம் எப்படி செயல்படும் என்ற அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. இதுபோல ஆடுகளத்தில் தான் நாங்கள் பயிற்சி செய்திருக்கின்றோம். நான் யாருக்கும் போட்டி கிடையாது. என்னுடைய பணியை நான் சரியாக செய்ய வேண்டும் என நினைக்கின்றேன்" என்று ராகுல் கூறியுள்ளார்.