மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுவது மற்ற அணிகளுக்கு செய்யப்படும் அநியாயம் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஹைபிரிட் முறைப்படி இந்தியா மட்டும் துபாயில் ஒரே ஹோட்டலில் தங்கி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் கூடுதல் சாதகம் இருப்பதாக நாசர் உசேன் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ராபின் உத்தப்பா, பாகிஸ்தானில் வந்து இந்தியா விளையாடாமல் போனது. மற்ற அணிகளுக்கு தான் நல்லது என குறிப்பிட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராபின் உத்தப்பா, இந்திய அணி மட்டும் பாகிஸ்தானில் விளையாடியிருந்தால் ரன் குவிப்புக்கு சாதகமான மைதானங்களில் பெருமளவு ரன்களை சேர்த்து இருப்பார்கள்.
இதன் மூலம் அவர்களுடைய ரெகார்டுகள் மேலும் வலுப்பெற்று இருக்கும். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் இதனை சிறப்பான வாய்ப்பாக பயன்படுத்தி ரன்களை சேர்த்து இருப்பார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இறுதியில் கிரிக்கெட் என்பது பேட்டிற்கும், பந்திற்கும் இடையிலான விளையாட்டு மட்டுமே இதில் அன்றைய நாளில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.
இது குறித்து புகார் அளித்துள்ளவர்களின் மனநிலையை நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு நாட்டிற்கு சென்று விளையாடவில்லை என்று சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இதை இந்தியாவுக்கு நன்மை என சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் களத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இந்தியாவுக்கு நன்கு தெரிந்திருக்கும்.
நடைபெறும் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியை ஐசிசி அபுதாபியிலும், இன்னொரு போட்டியை சார்ஜாவிலும் நடத்தி இருக்கலாம் என்று வசீம் ஜாபர் கூறியதை நான் கேட்டேன். அதுவும் ஒரு நல்ல ஐடியா தான். இவ்வாறு செய்திருந்தால் மற்ற அணிகள் நம்மை பார்த்து புகார் அளித்திருக்க மாட்டார்கள். இதே போல் துபாயில் வந்து விளையாடுவது என்பது எளிதான காரியம் கிடையாது. அரை இறுதியில் தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் சரி அதைப்பற்றி கவலை இல்லை. வீரர்களின் பார்ம் மற்றும் நமது பலம் மன உத்வேகம் மட்டும்தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.