துபாய்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகிய இருவரும் வலைப்பயிற்சியில் ஈடுபடாதது கவலையை அதிகரித்து இருக்கிறது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று இருக்கும் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது.
மூன்றாவதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாட உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர்களும், அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டனுமான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில்லுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மாவுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. எனினும், அப்போது அவர் அது பெரிய விஷயம் இல்லை, தான் நன்றாக இருப்பதாக கூறியிருந்தார். ஆனால், தற்போது இந்திய அணியின் வலை பயிற்சியில் அவர் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
ரோஹித் சர்மா இந்திய அணியின் வழக்கமான பேட்டிங் பயிற்சியிலோ, ஃபீல்டிங் பயிற்சியிலோ ஈடுபடவில்லை. அதனால் ரோஹித் சர்மாவின் தசை பிடிப்பு சிக்கலானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது.
ஒருவேளை ரோஹித் சர்மாவால் விளையாட முடியாமல் போனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் தான் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால், அவருக்கும் உடல் நலம் சரியில்லை என்ற தகவல் வெளியாகி மேலும் கவலையை அதிகரித்து உள்ளது.
இந்திய அணியின் வலைப்பயிற்சியின் போது துணை கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. அவர் மைதானத்திற்கே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு சிக்கலை அதிகரித்து உள்ளது. இதற்கிடையே ஒரே ஒரு நல்ல விஷயமும் நடந்துள்ளது.
அணியின் மாற்று விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது காய்ச்சலில் இருந்தார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அவர் தற்போது குணமடைந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்றாலும் தற்போது ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் விளையாடுவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் குணமடைந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது நல்ல விஷயமாக உள்ளது. மறுபுறம் முகமது ஷமிக்கும் கணுக்காலில் வலி ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. முகமது ஷமிக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஓய்வு அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.