துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்றுவிட்டது. டாப் 8 அணிகள் மோதிய இந்த தொடரில் தற்போது இறுதிப் போட்டிக்கு பலம் வாய்ந்த இரண்டு அணிகள் தகுதி பெற்றிருக்கிறது. இந்த தொடரில் தோல்வியே தழுவாத இந்தியாவும், இந்தியாவிடம் மட்டும் தோல்வியை தழுவிய நியூசிலாந்தும் பைனலில் மோதுகிறார்கள்.
இந்த போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரண்டு முப்பது மணிக்கு நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை லீக் சுற்றில் வீழ்த்தியது.

அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வீழ்த்தியது. இதேபோன்று நியூசிலாந்து அணி, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் வெற்றியை பெற்று லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. இந்த சூழலில் அரை இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றியை நியூசிலாந்து பெற்று இருக்கிறது.
இரண்டு அணிகளும் சம பலத்துடன் இருந்தாலும் லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்திய அணி இருக்கிறது. இந்த சூழலில் ஞாயிற்றுக்கிழமை இந்த போட்டி நடைபெறும் போது மழை பாதிப்பு ஏற்பட்டால் ரிசர்வ் டே திங்கட்கிழமை அதாவது மார்ச் பத்தாம் தேதி நடத்தப்படும். ரிசர்வ் டே அன்றும் மழை பெய்து ஆட்டம் தொடர முடியாத நிலை ஏற்பட்டால் புள்ளி பட்டியலில் எந்த அணி முதலிடம் பிடித்ததோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
இதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தைப் பிடித்ததால் அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால் துபாயில் தற்போது மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் போட்டி திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்து விடும். இந்தப் போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்கலாம்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் போட்டியை பார்க்கலாம். இந்திய அணி 50 ஓவர் தொடரில் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு ஐசிசி தொடரிலும் வெற்றி பெற்றதில்லை. மேலும் 2023 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது. இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி ஒருநாள் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.