துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு 35 வயதை தாண்டி விட்டது.
இதில் ரோகித் சர்மாவுக்கு வரும் ஏப்ரல் மாதம் 38 வயதாகிவிடும். விராட் கோலி மற்றும் ஜடேஜா என இருவருக்குமே 36 வயதாகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பையை கடந்த ஆண்டு இந்தியா வெற்றி பெற்ற போது, இந்த மூன்று வீரர்களும் ஒரே நேரத்தில் ஓய்வு முடிவை அறிவித்தார்கள்.

இந்த சூழலில் அடுத்து 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரும் 2027 ஆம் ஆண்டு தான் நடைபெற இருக்கிறது. இதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால் இந்த சீனியர் வீரர்கள் மூன்று பேரும் ஓய்வு முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தருணத்தில் தான் ஜடேஜா நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் பந்துவீச்சை முடித்தவுடன் விராட் கோலி அவரை கட்டி அணைத்தார்.
ஜடேஜாவும் ஏதோ போட்டியிலிருந்து பிரியாவிடை பெறுவது போல் ரியாக்ஷன் கொடுத்தார். இதனால் ஜடேஜா சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது ஜடேஜா அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தேவை இன்றி வதந்திகளை பரப்ப வேண்டாம். நன்றி என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜடேஜா பதிவிட்டு இருக்கிறார்.
இதன் மூலம் ஜடேஜா மேலும் சில ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் இல்லை என ரோகித் சர்மா கூறியிருந்தார்.
இதேபோன்று விராட் கோலி அளித்த பேட்டியில் இந்திய அணி நல்ல இடத்தில் நல்ல நிலைமையில் இருக்கும் போதுதான் ஓய்வு பெறுவேன் என்று விராட் கோலி கூறினார்.அதாவது டெஸ்ட் மற்றும் ஐசிசி ஒரு நாள் உலக கோப்பை தொடரை வென்ற பிறகுதான் செல்வேன் என்பதை மறைமுகமாக விராட் கோலி கூறியிருந்தார். தற்போது இந்த மூன்று வீரர்களும் ஓய்வு பெற போக வில்லை என அறிவித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.