துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக பலப்பரிட்சை நடத்துகிறது. நியூசிலாந்து அணி எப்போதுமே இந்தியாவுக்கு ஆபத்தை வழங்க கூடிய அணியாக தான் இருக்கிறது. 2019 உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து இடம் தோல்வியை தழுவி தான் தொடரை விட்டு வெளியேறியது.
எனினும் அண்மைக்காலமாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடைசியாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் ஐந்து முறை மோதியதில் 5 போட்டிகளில் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் லீக் சுற்றில் துபாயில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக ஹென்றி 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு பக்கபலமாக இருக்கும் அவருடைய வேகப்பந்துவீச்சு இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின்போது ஹென்றி பீல்டிங் செய்தார். அப்போது அவர் கேட்ச் பிடித்தபோது கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த போட்டியிலிருந்து பாதியில் விலகினார். அதன் பிறகு பந்து வீச ஹென்றி வரவில்லை. இது குறித்த கருத்து தெரிவித்திருந்த நியூசிலாந்து அணி நிர்வாகம் மேட் ஹென்றிக்கு தோள்பட்டையில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாக கூறி இருந்தது.
இந்த சூழலில் ஹென்றி நேற்று நடைபெற்ற பயிற்சிக்கும் வரவில்லை என தெரிகிறது. இதனால் இறுதிப்போட்டியில் மேட் ஹென்றி பங்கேற்க மாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கனவே லோகி பெகுர்சன் போன்ற நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக இடம்பெறாத நிலையில் ஹென்றியும் வெளியேறினால், அது இந்தியாவுக்கு அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.