துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி இருக்கிறது. துபாயில் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருப்பதால் பேட்டிங் செய்ததை கடினமாக இருந்தது. இந்த சூழலில் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் மேலும் தோய்வாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதன் காரணமாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சாண்ட்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த சூழலில் நியூசிலாந்து அணி 260 -280 ரன்களுக்கு மேல் அடித்தாலே அது இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும்.

இதனால் நியூசிலாந்தை எளிய இலக்கில் சுருட்டுவதற்காக இந்திய அணி கடுமையாக போராடியது. மேலும் முதலில் விளையாடிய வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். எனினும் வருண் சக்கரவர்த்தி ஓவரின் வில் யங் ஆட்டம் இழக்க அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா ஓவரில் 37 ரன்கள் எடுத்திருந்த போது வெளியேறினார்.
இதேபோன்று நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் வில்லியம்சன் 11 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் ஓவரில் பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து டேரல் மிட்செல் மற்றும் டாம் லாத்தம் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இதில் மிட்செல் டெஸ்ட் இன்னிங்ஸ் போல் அடித்து போராடினார். 101 பந்துகளை எதிர்கொண்ட மிட்செல் 63 ரன்கள் சேர்த்த நிலையில் சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதே போன்று டாம் லாத்தம் 14 ரன்கள் எடுத்திருந்தபோது பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளான் பிலிப்ஸ் வருண் சக்கரவர்த்தி ஓவரில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிளீன் போல்ட் ஆனார். இது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
எனினும் இறுதியில் பிரஸ்வெல் மட்டும் நிதானமாக நின்று இறுதியில் அதிரடியை காட்டி 39 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 252 ரன்கள் சேர்த்து இருக்கிறது. இது இந்தியாவுக்கு சவாலான இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி பந்துவீச்சு தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா, ஷமி ஆகியோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார்கள்.