துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோல்வியை தழுவாத இந்திய அணியும், இந்தியாவிடம் மட்டுமே தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து அணியும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
லீக் சுற்றில் இரு அணிகளும் மோதியபோது இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் அதே மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் இரு அணிகளுக்கும் துபாய் ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து புரிதல் இருக்கும்.

ஆடுகளம் மிகவும் தோய்வாக இருக்கும் என்பதால் போட்டி கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சூழலில் நியூசிலாந்து அணி ஐசிசி தொடரில் விளையாடினாலே பல எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இப்படி தான் 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் டையில் முடிந்தது.
இதனை அடுத்து சூப்பர் ஓவர் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த சூப்பர் ஓவர் டை ஆன நிலையில் அதிக பவுண்டரிகள் யார் அடித்தார் என பார்த்து இங்கிலாந்து அணி தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையானது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியும் டை ஆனால் என்ன நடக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
அதன்படி இறுதிப் போட்டி டையில் முடிவடைந்தால் வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்படும். ஒருவேளை அந்த சூப்பர் ஓவரும் டை ஆனால் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு சூப்பர் ஓவர் நடத்தப்படும். இப்படி வெற்றியாளர்களை தீர்மானிக்கும் வகையில் சூப்பர் ஓவர் தொடர்ந்து நடத்தப்படும்.
ஒருவேளை மோசமான வானிலை காரணமாக சூப்பர் ஓவர் நடத்தப்பட முடியாத சூழ்நிலையில் போட்டி டையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும். இந்த புதிய விதியை ஐசிசி டிசம்பர் 2023 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. ஐபிஎல் தொடரில் கூட பஞ்சாப் மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் முதல் சூப்பர் ஓவர் டை ஆன நிலையில், இரண்டாவது சூப்பர் ஓவர் நடைமுறைப்படுத்தப்பட்டு பஞ்சாப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.