துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நிறைவு செய்திருக்கிறது. இதன் மூலம் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வரும் செவ்வாய்க்கிழமை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "வெற்றியுடன் லீக் சுற்றை முடிப்பது என்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது."

"நியூசிலாந்து அணி எப்போதுமே ஒரு நல்ல வீரர்களை அடங்கிய அணி. அவர்கள் எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். நாங்கள் பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு ஸ்ரேயாஸ், அக்சர் பட்டேல் பார்ட்னர்சிப் அமைத்து எங்களை சரிவிலிருந்து மீட்டது. மிகவும் ஒரு முக்கியமான விஷயமாக கருதுகிறேன்."
"இதன் மூலம் நாங்கள் ஒரு நல்ல இலக்கை எட்ட உதவியது. எங்கள் அணியில் இருக்கும் பவுலர்களை வைத்து இந்த இலக்கை நாங்கள் எட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. வருண் சக்கரவர்த்திக்கு வித்தியாசமான திறமை இருக்கிறது. இந்த போட்டியில் அவர் எங்களுக்கு என்ன மாதிரி செயல்படுவார் என்பதை பார்க்கத்தான் வாய்ப்பு வழங்கினோம்."
"ஆனால் தற்போது அவர் வீசிய விதத்தை பார்த்து அடுத்த போட்டியில் யாரை சேர்ப்பது என்பதில் ஒரு நல்ல தலைவலி ஏற்பட்டுவிட்டது. வருண் சக்கரவர்த்தி சரியான முறையில் பந்து வீசினால் அவரை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறுவது அவசியம்."
"ஏதேனும் போட்டிகளில் நாம் தவறு செய்யலாம். அந்த தவறை எப்படி திருத்துவது என்பதுதான் முக்கியம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஒரு நல்ல ஆட்டமாக இருக்கும் என நினைக்கின்றேன். ஆஸ்திரேலியா ஐசிசி போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடக்கூடிய அணி. எங்களை பொறுத்தவரை செய்ய வேண்டிய விஷயத்தை கரெக்டாக செய்ய வேண்டும். அன்றைய நாளில் என்ன செய்வது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதை நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அரை இறுதியில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருக்கிறது."