மிடில் ஆர்டர் குழப்பம்
இந்திய அணியில் மிடில் ஆர்டரில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. தற்போது மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய ரிஷப் பண்ட், தோனி, ஹர்திக் பண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு பெற்றார். அதிலும் பெரிதாக ரன் எடுக்கவில்லை.
வேகப் பந்துவீச்சாளர் யார்?
வேகப் பந்துவீச்சாளர்களில் பும்ராவின் இடம் மட்டுமே உறுதியாக உள்ளது. புவனேஸ்வர் குமார் பந்தை ஸ்விங் செய்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அணியில் அதிக வாய்ப்பு பெற்று வருகிறார். அவரால் அதிக விக்கெட் வீழ்த்தவோ, ரன்களை கட்டுப்படுத்தவோ முடியவில்லை. மறுபுறம் ஷமி, கடைசி ஓவர்களில் ரன்களை கொடுத்தாலும், விக்கெட் வீழ்த்துவதில் கில்லாடியாக இருக்கிறார். மேலும், ஜாதவ் சேர்க்கப்படாத நிலையில் இந்திய அணியில் பகுதி நேர பந்துவீச்சாளர்களும் இல்லை.
சச்சின் சொல்லும் யோசனை
இந்த நிலையில், மிடில் ஆர்டர் பேட்டிங், வேகப் பந்துவீச்சாளர் குழப்பம், கூடுதல் பந்துவீச்சாளர் தேவை என எல்லாவற்றுக்கும் தீர்வு அளிக்கும் வகையில் அனுபவம் வாய்ந்த சச்சின் தன் திட்டத்தை கூறி இருக்கிறார்.
தினேஷ் கார்த்திக் வெளியே
அதன்படி பேட்டிங் வரிசையில் தினேஷ் கார்த்திக் ஏழாவதாக களமிறங்கும் பட்சத்தில், அது அணிக்கு பெரிய அளவில் உதவப் போவதில்லை. அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைப்பது என்பதே அரிது என்ற நிலை தான் உள்ளது.
ஜடேஜா உள்ளே
அதனால், ஜடேஜாவை தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ஆட வைக்கலாம். அவரது பேட்டிங் கடைசி நேரத்தில் கை கொடுப்பதோடு, அவர் கூடுதல் பந்துவீச்சாளராகவும் செயல்படுவார் என்றார் சச்சின். ஜடேஜா இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷமி வேண்டும்
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஷமியை நிச்சயம் களமிறக்க வேண்டும். அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய போது ஷமி சிறப்பாக பந்து வீசினார் என்றார் சச்சின்.