துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதி சுற்றில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த இறுதிப் போட்டியில் விராட் கோலி 2 மிகப்பெரிய சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சதமும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 84 ரன்கள் அடித்திருந்தார் இந்த சூழலில் விராட் கோலிக்கு தற்போது மகத்தான ஒரு சாதனை படைக்க ஃபைனலில் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெயரை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் படைத்திருக்கிறார். 17 இன்னிங்ஸில் அவர் 791 ரன்களை அடித்திருக்கிறார்.இந்த சூழலில் விராட் கோலி சாம்பியன் டிராபி வரலாற்றில் 17 இன்னிங்ஸ் விளையாடி 746 ரன்கள் அடித்துள்ளார். இதில் அவருடைய சராசரி 82 ஆகும்.
தற்போது விராட் கோலி இறுதி போட்டியில் 46 ரன்கள் சேர்த்தால் சாம்பியன் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெயரை பெறுவார். இதேபோன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு தங்க பேட் பரிசாக வழங்கப்படும். அந்த வகையில் விராட் கோலி நடப்பு தொடரில் 4 இன்னிங்ஸ் விளையாடி 217 ரன்கள் அடித்து இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
முதலிடத்தில் இங்கிலாந்து வீரர் பென் டக்கட் 227 ரன்களுடனும், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா 226 ரன்களுடனும், ஜோ ரூட் 225 ரன்கள் உடனும் இருக்கிறார். இந்த சூழலில் இறுதி போட்டியில் விராட் கோலி, ரச்சின் ரவீந்திரா எடுக்கும் ஸ்கோரை விட ஒன்பது ரன்கள் கூடுதலாக அடிக்க வேண்டும். அப்படி நடைபெறும் பட்சத்தில் நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெறுவார். இதற்காக அவருக்கு தங்க பேட் பரிசாக வழங்கப்படும்.
இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய அணி சார்பாக டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 41 இன்னிங்சில் 1760 ரன்கள் அடித்திருக்கிறார். 2வது இடத்தில் உள்ள விராட் கோலி 1656 ரன்கள் அடித்துள்ளார். இதனால் விராட் கோலி இறுதிப் போட்டியில் 105 ரன்கள் அடித்தால் சச்சினை பின்னுக்கு தள்ளி அவர் முதலிடம் பிடிக்கவாய்ப்புள்ளது. ஒட்டு மொத்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 1971 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.