துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை இந்தியா பைனலில் இன்று எதிர்கொள்ள இருக்கிறது. இந்த சூழலில் இந்தியாவை மீண்டும் வம்பு இழுக்கும் வகையில் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாஹன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்திய அணி தொடர்ந்து ஒரே மைதானத்தில் விளையாடுவதால் கூடுதல் சாதகம் ஏற்படுகிறது என இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து புகார் கூறுகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலிருந்து பல விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்தியா தங்களது புதிய சொந்த ஊரில் வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார். இந்தியா துபாயில் விளையாடி வரும் நிலையில் துபாய் எங்களுக்கு சொந்த ஊர் கிடையாது என ரோகித் சர்மா காட்டமாக கூறியிருந்தார்.
ஆனால் தற்போது இந்தியா தொடர்ந்து ஒரே மைதானத்தில் விளையாடி வருவதால் துபாய் இந்தியாவின் புதிய சொந்த ஊர் என்பதை மைக்கேல் வாகன் குறிப்பிட்டிருக்கிறார். மைக்கேல் வாஹனின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் வெளிநாட்டு வீரர் வாஹனின் இந்த கருத்தை கங்குலி கடுமையாக எதிர்த்து இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் துபாயில் மட்டும்தான் விளையாடுவோம் என்று இந்தியா யாரிடமும் சண்டை போடவில்லை. பாகிஸ்தானுக்கு செல்ல முடியாத காரணத்தினால் தான் அவர்கள் வெளிநாட்டில் விளையாடுகிறார்கள். இதில் இந்தியாவின் தலையீடு எதுவும் இல்லை.
சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்த 2020 ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்ட போது பிசிசிஐ தலைவராக நான் இருந்தேன். அப்போது அவர்கள் கேட்டதற்கு இந்தியா சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால் இந்தியா தான் தலையிட்டு போட்டியை ஒரே மைதானத்தில் நடத்துவதாக கூறுவது என்பது தவறு. விராட் கோலி, ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் போன்ற வீரர்கள் எல்லாம் பாகிஸ்தானில் விளையாடி இருந்தால் 350 ரன்களுக்கு மேல் அடித்திருக்கலாமே என்று நிச்சயம் வருத்தம் தான் படுவார்கள் என்று கங்குலி கூறியுள்ளார்.