துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள நிலையில், இப்போதே இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் எழுந்து இருக்கிறது. ஹர்திக் பாண்டியா இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்படப் போவதாக சமூக வலைதளங்களிலும், பல்வேறு ஊடகங்களிலும் தகவல்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இது ரசிகர்கள் மத்தியில் தேவையற்ற விவாதங்களை எழுப்பி உள்ளன. இந்தியா - நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்பு இது தேவையற்ற ஒரு சர்ச்சையாக உருமாறி உள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை கிரிக்கெட் விளையாடுவது சந்தேகத்திற்கு உரிய விஷயமாகவே உள்ளது.

ரோஹித் சர்மாவுக்கு தற்போது 38 வயதாகிறது. அவரது பேட்டிங் குறித்தும் விமர்சனங்கள் உள்ளன. அவர் நிலையாக ரன் குவிப்பதில்லை என்ற விமர்சனமும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அவர் ஓய்வை அறிவிப்பார் என சிலரும், அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என சிலரும் கூறி வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் முடிவில் பிசிசிஐ அடுத்த இந்திய அணி கேப்டனை அறிவிக்கும் என்ற ஒரு செய்தியும் வெளியாகி உள்ளது. சுப்மன் கில் தற்போது இந்திய ஒரு நாள் அணியின் துணை கேப்டனாக இருக்கும் நிலையில், அவருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் தான் கேப்டன் பதவிக்கான போட்டி நிலவும் என கூறப்படுகிறது.
ஒருவேளை அவர்கள் இருவராலும் கேப்டன் பதவியை பெற முடியாத சூழ்நிலை ஏதேனும் இருந்தால், அப்போது கே.எல். ராகுலுக்கு இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு முன்பாகவே இது போன்ற தேவையற்ற விவாதங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
இது குறித்து சுப்மன் கில்லிடமும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவிப்பார்களா? என்ற கேள்விக்கு கில் பதில் அளிக்கையில், "அப்படி எதுவும் இல்லை. தற்போதைய இறுதிப் போட்டியில் தான் தங்களின் கவனம் இருக்கிறது" எனவும் சுட்டிக்காட்டினார்.