துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கம்பீர் பதவியேற்ற பின் நடைபெறும் முதல் ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் கோப்பையில் தற்போது இறுதிப் போட்டி வரை இந்தியா தகுதி பெற்றிருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிராக பைனலில் இந்தியா விளையாடுகிறது.
இந்த சூழலில் இந்தியா அணி குறித்து ஐசிசி இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் கம்பீர், பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "நான் எப்போதுமே ஜடேஜா பெரிய அளவில் கவனிக்கப்படுவதில்லை என்பதை உணருகிறேன்."

"ஜடேஜாவின் திறமை பற்றி நாம் பெரிய அளவில் பேசுவதும் கிடையாது.கொண்டாடுவதும் கிடையாது. இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார்."
டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி, t20 ஆக இருந்தாலும் சரி, ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி ஜடேஜா இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரராக திகழ்கிறார்.
"வெறும் பந்து மற்றும் பேட்டால் மட்டுமல்ல பீல்டிங்கிலும் அவர் பட்டையை கிளப்புவார். உலக கிரிக்கெட்டில் தற்போது இருக்கும் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஜடேஜாவும் ஒருவர். இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஜடேஜாவின் மதிப்பு என்ன என்று எங்கள் அனைவருக்கும் தெரியும். இதனால் ஜடேஜாவுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்."
"ஆனால் அதே போல் ஒரு முக்கியத்துவம் டிரெஸ்ஸிங் ரூம் வெளியே ஜடேஜாவுக்கு கிடைப்பதில்லை" என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் குல்தீப் யாதவ் விக்கெட் எடுக்காமல் இருந்த நிலையில் ஜடேஜா தான் தன்னுடைய பந்து வீச்சு மூலம் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஜடேஜா இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதை போன்ற பேட்டிங் 12 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 377 ரன்கள் அடித்திருக்கிறார். கடந்த 2019 உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஜடேஜா 77 ரன்கள் அடித்து தனி ஆளாக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.