துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. நியூசிலாந்து அணியை இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணி கோப்பை வென்ற நிலையில், ஹர்திக் பாண்டியா கே எல் ராகுலின் ஆட்டம் குறித்தும், இந்திய அணியின் வெற்றி குறித்தும் மகிழ்ச்சியுடன் பேசினார்.
அவர் பேசுகையில், "2017 சாம்பியன்ஸ் டிராபி எனது இதயத்திற்கு அருகே உள்ளது. ஆனால், அப்போது எங்களால் வெற்றி பெற முடியாமல் போனது. ஆனால், இந்த முறை அணிக்காக சிறப்பான பங்களிக்க முடிந்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது."
"கே எல் ராகுல் இந்த இறுதிப் போட்டியில் ஆடியது அற்புதமாகவும் இருந்தது. கே.எல். ராகுல் அமைதியாகவும், கட்டுக்கோப்பாகவும் தனக்கான வாய்ப்பை மட்டுமே பயன்படுத்தி ஆடினார். அதுதான் கே.எல். ராகுல். அவரிடம் அதிக திறமை உள்ளது. அவர் அடித்தது போல அந்த ஷாட்களை வேறு யாராலும் அடிக்க முடியாது" என்றார்.

இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேரில் மிட்செல் 63 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்களும் எடுத்திருந்தனர். அடுத்ததாக இந்திய அணி சேசிங் செய்த போது, ரோஹித் சர்மா 76 ரன்கள் சேர்த்தார்.
ஆனால், அடுத்து சுப்மன் கில் 31, விராட் கோலி 1, ஸ்ரேயாஸ் ஐயர் 48, அக்சர் பட்டேல் 29 ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதன் பின் ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இணைந்து ஆடினர். ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
கே.எல். ராகுல் மிகவும் அழுத்தமான சூழ்நிலையில் 33 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது சிறப்பான செயல்பாடு இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தது. அப்போது அவர் அடித்த சிக்ஸ் ஒன்றை தான் ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டு புகழ்ந்து பேசினார்.