துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் 50 ஓவர் கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஐசிசி தொடரை வென்று இருக்கிறது.மேலும் ஐசிசி கோப்பையை வென்று இந்தியா அசத்தியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், டி20 உலக கோப்பையை வென்ற பிறகு அந்தப் பதவியில் இருந்து விலகினார்.
இதனை அடுத்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் பதவி வகித்தார். கம்பீரின் வருகையை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், நடந்தது என்னவோ அதற்கு நேர்மாறாக தான் இருந்தது.
ஆம், கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி எங்கெல்லாம் தோற்காமல் இருந்ததோ, அங்கே எல்லாம் போய் தோல்வியை சந்தித்து வந்தது.

இலங்கை மண்ணில் ஒரு நாள் தொடரின் தோல்வி, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்றுக்கு பூஜ்ஜியம் என டெஸ்ட் போட்டிகளில் தோல்வி, பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி என கம்பீர் தலைமையில் இந்தியா சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
எனினும் டி20 கிரிக்கெட் கம்பீர், சூரியகுமார் யாதவ் ஜோடி தொடர்ந்து வெற்றியை பெற்றது. கம்பீர் வந்தால் இந்திய அணி உச்சம் தொடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கம்பீரின் செயல்பாடு பெரிய அளவு திருப்தி தரவில்லை. இந்த சூழலில் தான் கம்பீருக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஒரு அக்னி பரீட்சை போல் இருந்தது.
பயிற்சியாளராக கம்பீர வந்தவுடன் அவர் கேட்ட விஷயங்களை எல்லாம் பிசிசிஐ செய்து கொடுத்தது. ஆனால் அதற்கான ரிசல்ட் கிடைக்கவில்லை என்றவுடன் பிசிசிஐ நிர்வாகிகளும் கம்பீருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். கம்பீரின் தனிப்பட்ட பிஏ இனி எந்த தொடருக்கும் சொல்லக்கூடாது என்று தடை விதித்தனர். இது கம்பீருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை எப்படியாவது வென்று ரசிகர்களிடம் இழந்த பெயரை மீட்க வேண்டும் என ரோகித் சர்மாவும் கம்பீரும் இணைந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தனர். இந்திய அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்வது, இந்திய அணியின் பலத்தை மேலும் பலமாக்குவது, வீரர்களுக்கு முழு சுதந்திரம் வழங்குவது, ஒவ்வொரு வீரர்களுக்கும் தங்களுடைய பொறுப்பு என்ன என்பதை விவரித்து கூறுவது என நான்கு விஷயங்களை சரியாக செய்தனர்.
இந்திய அணி துபாயில் தான் விளையாடப் போகிறது என தெரிந்தவுடன் அதற்கு ஏற்ற வீரர்களை இந்தியா தேர்வு செய்தது. அதன் ஒரு பகுதியாக டி20 போட்டிகளில் அபாரமாக விளையாடி வந்த வருண் சக்கரவர்த்தியை 50 ஓவர் மெயின் அணியில் இந்தியா சேர்த்தது. இதேபோன்று இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து தைரியமான முடிவை எடுத்தது.
மேலும் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு வந்து பந்துவீச்சில் இருந்த குறையை இந்த ஜோடி சரி செய்தது.
இதேபோன்று ஸ்ரேயாஸ், கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்து நீங்கள் ரன்னே அடிக்கவில்லை என்றாலும் உங்களுடைய இடம் அணியை விட்டு பறிபோகாது என உத்திரவாதத்தை கம்பீர் வழங்கி இருக்கிறார். இப்படி ஒவ்வொரு காயையும் பார்த்து கம்பீர், ரோகித் கூட்டணி நகர்த்திருக்கிறது.
மேலும் வீரர்களுடன் குடும்பத்தார் தங்கக் கூடாது உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை கம்பீர் எடுத்தார். இந்த மாற்றங்கள் தான் தற்போது இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல உதவி இருக்கிறது.