துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி நாளை ஞாயிற்றுக்கிழமை துபாயில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்த சூழலில் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் அவர்களுக்கு கூடுதல் சாதகம் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கோடாக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களுக்கு அப்படி என்ன சாதகம் கிடைத்துவிட்டது என்று அனைவரும் புலம்பி கொண்டிருக்கிறார்கள். இந்த ஆடுகளம் எங்களுக்கு சாதகமாகவே இல்லை. ஆனால் நாங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் எங்களுக்கு சாதகமாக அனைத்தும் இருக்கிறது என்று சிலர் பேசுகிறார்கள்."

"இதைப் பற்றி எனக்கு என்ன சொல்ல வேண்டும் என தெரியவில்லை. எங்களுக்கு என்ன அட்டவணை கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல் தான் நாங்கள் விளையாடுகிறோம். விளையாட்டில் நீங்கள் அன்றைய நாளில் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தினீர்கள் என்றால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் நீங்கள் தோல்வியடைவீர்கள்."
"நீங்கள் சரியாக விளையாடாமல் புலம்பி கொண்டு இருப்பதில் என்ன பயன்? நீங்கள் சரியாக விளையாடி நீங்கள் வென்றால் எதிரணிக்கு சாதகம் இருக்கிறது, இல்லை என்பது குறித்து எல்லாம் பேசவே தேவையில்லை. நாங்கள் ஐசிசி அகாடமியில் பயிற்சி செய்து விட்டு துபாய் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுகிறோம்."
"இதில் எங்களுக்கு என்ன சாதகம் வந்து விடப் போகிறது. இப்படி எல்லாம் யோசிப்பதை விட்டு விட்டு நல்ல கிரிக்கெட்டை எப்படி விளையாடுவது என்று யோசிங்கள். கடைசி போட்டியில் என்ன நடந்தது என்பது குறித்து எப்போதும் யோசிக்க கூடாது. நாங்கள் ஒன்பதாம் தேதி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தான் பேசி வருகின்றோம். இந்திய அணியை பொறுத்தவரை ராகுல் நம்பர் ஆறாவது வீரராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்."
"அவருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இறுதிப் போட்டிக்கு முன்பு எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அணியில் உள்ள சீனியர் வீரர்கள் இளம் வீரர்களிடம் பேசி ஊக்கமளித்து வருகிறார்கள். எங்கள் அணியில் இருக்கும் சில வீரர்களுக்கு 15 ஆண்டுகள் மேல் அனுபவம் இருக்கின்றது. இதனால் இளம் வீரர்கள் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள். எங்கள் அணி தற்போது நல்ல சூழலில் இருக்கிறது" என்று பேட்டிங் பயிற்சியாளர் கோட்டாக் தெரிவித்துள்ளார்.