மும்பை: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி நாளை (மார்ச் 8) அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தாலும், அந்தப் போட்டியில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் அணி நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங்கிற்குச் சாதகமான தட்டையான ஆடுகளங்களில் இந்தியப் பந்துவீச்சு தடுமாறுவது அப்பட்டமாகத் தெரிய வந்துள்ளது. இது இறுதிப்போட்டியில் இந்திய அணிக்குச் சறுக்கலை ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 253 ரன்கள் குவித்தது. ஆனால், இங்கிலாந்து அணி 246 ரன்கள் வரை அடித்து, வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியைத் தழுவியது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களின் மோசமான செயல்பாடே ஆகும். வருண் சக்கரவர்த்தி ஓவருக்கு 16 ரன்களையும், அக்சர் பட்டேல் ஓவருக்கு 11.7 ரன்களையும் வாரி வழங்கினர்.

சுழற்பந்து வீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்தத் தவறியதால், கேப்டன் சூர்யகுமார் யாதவ் வேறு வழியின்றித் தனது பிரம்மாஸ்திரமான ஜஸ்பிரித் பும்ராவை 16 மற்றும் 18வது ஓவர்களிலேயே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கடைசி ஓவரை வீசச் சிறப்புப் பந்துவீச்சாளர்கள் யாருமில்லை. வேறு வழியின்றி 20வது ஓவரை வீசிய சிவம் துபே, இங்கிலாந்து அணியின் கடைசி வரிசை வீரர்களுக்கே 22 ரன்களை விட்டுக்கொடுத்தார். தட்டையான ஆடுகளங்களில் பும்ரா இல்லையென்றால் இந்தியப் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
இந்திய அணி பேட்டிங் வரிசையை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகக் கூடுதல் பேட்ஸ்மேன்களைச் சேர்த்துள்ளது. இதனால் ஆறாவது பந்துவீச்சாளர் என்ற மாற்றுத் திட்டம் அணியில் இல்லாமல் போய்விட்டது. தற்போது ஹர்திக் பாண்டியா ஐந்தாவது பந்துவீச்சாளராகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆனால், அவரைத் தவிர்த்துப் பார்த்தால் சிவம் துபே மட்டுமே மாற்றுப் பந்துவீச்சாளராக உள்ளார்.
உலகக் கோப்பைக்கு முந்தைய போட்டிகளில் துபேவுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும், தட்டையான ஆடுகளங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தவோ அல்லது ரன்களைக் கட்டுப்படுத்தவோ அவரால் முடியவில்லை என்பது அரையிறுதியில் நிரூபணமாகியுள்ளது. ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும்போது, எதிரணி பேட்ஸ்மேன்களைச் சமாளிக்கத் தரமான ஆறாவது பந்துவீச்சாளர் இல்லாதது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

வருண் சக்கரவர்த்தி அரையிறுதியில் அதிக ரன்களைக் கொடுத்திருந்தாலும், அவருக்குப் பதிலாகக் குல்தீப் யாதவை இறுதிப்போட்டியில் சேர்ப்பது நல்ல முடிவாக இருக்காது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில், வருண் சக்கரவர்த்திக்கு அகமதாபாத் மைதானத்தில் விளையாடிய அனுபவம் அதிகம் உள்ளது. அங்கு அவரது பந்துவீச்சு எடுபடும் என்பதால் அவரையே அணியில் தக்கவைக்க வாய்ப்புள்ளது.

எது எப்படியோ, ஜஸ்பிரித் பும்ரா ஒவ்வொரு முறையும் அணியைக் காப்பாற்றுவார் என்று சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நம்பியிருக்க முடியாது. பும்ராவுக்கு ஒருவேளை மோசமான நாளாக அமைந்தால், அதனைக் கையாள்வதற்கான மாற்றுத் திட்டம் என்ன என்பதை இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்தியா யோசிக்க வேண்டும். இல்லையெனில், 250 ரன்கள் அடித்தாலும் வெற்றியைத் தக்கவைப்பது கடினமாகிவிடும்.