துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை மூன்றாவது முறையாக வென்று இந்திய அணி சாதனை படைத்திருக்கிறது. இந்த தொடரை இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா அபாரமாக விளையாடி 37 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் இந்திய வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியில் மைக்கேல் பிரஸ்வெல் 40 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இதனால் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது.

இந்திய பந்துவீச்சு தரப்பில் வருண் சக்கரவர்த்தி , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை அடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா, கில் ஜோடி ஆகியோர் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். கில் 31 ரன்களில் பிலிப்ஸின் அபாரமான கேட்சால் ஆட்டம் இழந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததால் சரிவை நோக்கி சென்றது. எனினும் ஸ்ரேயாஸ் மற்றும் அக்சர் பட்டேல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்ரேயாஸ் 48 ரன்கள் எடுத்த நிலையில் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எனினும் கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி பொறுப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அருகே அழைத்து சென்றனர். அப்போது ஹர்திக் பாண்டியா 18 ரன்களில் ஆட்டம் இழந்ததால் மீண்டும் டிவிஸ்ட் ஏற்பட்டது. அப்போது, வெற்றிக்கு 15 பந்துகளின் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராகுல்,ஜடேஜா இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.