துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி சுற்றில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் என்பதால் போட்டியின் பிற்பகுதியில் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணியை குறைந்த இலக்கில் சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. இந்த நிலையில் தான் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர்.

முதல் இரண்டு ஓவர்கள் வரை அமைதி காத்த இந்த ஜோடி மூன்றாவது ஓவரில் இருந்து அதிரடி காட்டி ரன்களை சேர்த்து வருகிறது. பவர் பிளேவில் தான் பெரிய அளவு ரன்களை குவிக்க முடியும் என்பதால் இந்த ஜோடி சில ரிஸ்க்களை எடுத்து விளையாடி வந்தது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா, முகமது ஷமியின் பந்துவீச்சை ரச்சின் ரவீந்திரா சுளுக்கு எடுத்தார்.
இந்த நிலையில் தான் ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. ரச்சின் ரவீந்தரா 28 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி வீசிய பந்தை அடிக்க முற்பட்டார். அந்த பந்து ஷமியின் முகத்திற்கு நேராக வந்தது. இது கடினமான கேட்சாக இருந்தாலும், இந்த கேட்ச்- ஐ ஷமி பிடிக்காமல் தவறவிட்டார்.
இதனால் ரச்சின் ரவீந்திரநாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. கேட்ச் பிடிக்க முற்பட்டபோது ஷமியின் சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து ஷமி அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டார். ஷமி கேட்சை விட்ட உடன் ஸ்லிப்பில் இருந்த ரோகித் சர்மா கடுப்பாகி ஷமியை திட்டினார்.
இதே போன்று ரச்சின் ரவீந்திரா 29 ரன்கள் எடுத்திருந்த போது வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஒரு கடினமான கேட்ச் வாய்ப்பை ஸ்ரேயாஸ் தவறவிட்டார். நியூசிலாந்து அணியில் அதிக ரன்கள் அடித்து இந்த தொடரில் நல்ல பார்மில் இருக்கும் ரச்சின் விக்கெட்டை இந்திய அணி எவ்வளவு விரைவாக எடுக்கிறார்களோ அவ்வளவும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.