துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் கோப்பை கனவுக்கு நியூசிலாந்து அணி மீண்டும் ஒரு தடையாக வந்திருக்கிறது. எட்டு அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த அணி என்றால் அது நியூசிலாந்து மட்டும்தான்.
இந்திய அணி எந்த பார்முலாவை பயன்படுத்துகிறதோ, அதே பார்முலாவை தான் நியூசிலாந்து அணியும் வைத்திருக்கிறது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவதால் நியூசிலாந்து இரண்டு சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் என மொத்தம் நான்கு ஸ்பின்னர்களை பயன்படுத்துகிறது.

குறிப்பாக நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாட்னர் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றார். சாட்னர் , பிரஸ்வெல் இணைந்து கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். மேலும் ரச்சின் ரவீந்தராவும் சுழற் பந்துவீச்சில் சில ஓவர்களை வீசி நெருக்கடி தருகிறார்.
இந்த நிலையில் நியூசிலாந்து சுழற் பந்துவீச்சை எதிர்கொள்வதற்காக இந்திய அணி சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக ஐசிசி அகாடமி பயிற்சி முகாமில் இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சியின் போது முழுக்க முழுக்க சுழற்பந்துவீச்சை எதிர் கொண்டார்கள். வருண் சக்கரவர்த்தி, குல்தீப், அக்சர் பட்டேல், ஜடேஜா என 4 சுழற் பந்துவீச்சாளர்களும் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசி வந்தார்கள்.
சாட்னர் போல் ஜடேஜாவும் அக்சர் பட்டேலும் இடது கை சுழற்பந்துவீச்சாளர் என்பதால் அவர்களது பந்துகளை ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ், ராகுல் போன்ற வீரர்கள் அதிக அளவில் எதிர்கொண்டனர். மேலும் ஆடுகளம் மிகவும் தொய்வாக இருந்தால் ரன் கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.
அதனை சமாளிக்க சிங்கிள்ஸ் எப்படி எடுப்பது என்பது குறித்து பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டனர். மேலும் பெரிய ஷாட்களை ஆடி எப்படி ரன் எடுப்பது என்பது குறித்தும் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கோட்டாக், எங்களுக்கு எந்த ஆடுகளம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் நாங்கள் தயாராகி விடுவோம்.
எங்கள் வீரர்கள் அதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தால் எங்கள் அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இல்லையென்றால் அதிக அளவு சிங்கிள்ஸ் எடுத்து போட்டியை கடைசி வரை கொண்டு சென்று பின் முடிக்க முயற்சி செய்வார்கள். அதற்கான பயிற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என்று கோட்டாக் கூறியுள்ளார்.