அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த மாபெரும் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணித்துள்ளார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், ஆட்டத்தின் 18வது ஓவரை வீசிய பும்ரா வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து ஆட்டத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார். இதனைக் குறிப்பிட்ட மைக்கேல் கிளார்க், பும்ராவின் அந்தத் துல்லியமான பந்துவீச்சுதான் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று கூறினார்.

"ஒரு பந்துவீச்சாளரிடம் பலவிதமான பந்துவீச்சு முறைகள் இருக்கலாம். ஆனால், ஆட்டத்தில் கடுமையான நெருக்கடி இருக்கும்போது அதைச் சரியாகச் செயல்படுத்துவதுதான் மிக முக்கியம். அந்தத் திறமை பும்ராவிடம் அதிகமாக உள்ளது. இதுதான் அவரை உலகின் சிறந்த பந்துவீச்சாளராக மாற்றுகிறது. இந்திய அணியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர் இருக்கிறார். எனவே, இறுதிப்போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருதை வென்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அவர் அவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறார்," என்று கிளார்க் தெரிவித்தார்.
பும்ராவின் திறமையை "அசாத்தியமானது" என்று வர்ணித்த கிளார்க், கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் அவரே தற்போது உலகின் மிக முக்கியமான வீரர் என்று குறிப்பிட்டார். "பும்ரா ஒரு மேட்ச் வின்னர். அவரால் மிகக்கடினமான ஓவர்களைக் கூட எளிதாக வீச முடிகிறது. ரன்களைக் கட்டுப்படுத்தும் இயந்திரமாகவும், விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரராகவும் அவர் திகழ்கிறார்."
"உலக கிரிக்கெட்டில் வேறு யாரையும் விட, அழுத்தமான சூழலைக் கையாள்வதில் பும்ரா சிறந்தவர். சிறந்த பேட்ஸ்மேன்கள் எப்படி உலகெங்கிலும் உள்ள மைதானங்களில் ரன் குவிப்பார்களோ, அதேபோல பும்ரா எந்தச் சூழலிலும், ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் விக்கெட் வீழ்த்திப் போட்டியை வென்று கொடுப்பார்" என்று அவர் பாராட்டினார்.

பும்ராவை எப்போது பந்துவீச அழைப்பது என்பதுதான் ஒரு கேப்டனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்று கிளார்க் கருத்து தெரிவித்தார். "நான் அவருக்குக் கேப்டனாக இருந்தால், அவரை எந்த ஓவரில் பயன்படுத்துவது என்பதுதான் எனக்குப் பெரிய குழப்பமாக இருக்கும். அதனால்தான் இந்திய அணி பெரும்பாலும் அவரைப் புதிய பந்தில் வீச வைப்பதைத் தவிர்த்து, ஆட்டத்தின் இறுதி ஓவர்களுக்காகப் பாதுகாத்து வைக்கிறது. கடைசி நேரத்தில் அவரிடம் இருந்து இரண்டு ஓவர்கள் கிடைப்பது அணிக்கு மிகப்பெரிய பலம்" என்று அவர் விளக்கினார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 6.62 என்ற அளவில் மிகச் சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.