துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் தோல்வியை தழுவாமல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் செயல்படுகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கே எல் ராகுல் 34 பந்துகளை எதிர் கொண்டு 42 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இந்த சூழலில் கே எல் ராகுல், இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற வீரராக விளங்குகிறார். டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஒரு நாள் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இந்திய அணி சொல்லும் பணியை எல்லாம் ராகுல் சிறப்பாக செய்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, "நாம் கார்களில் வைத்திருக்கும் உதிரி டயர்களை கூட இந்த அளவிற்கு பயன்படுத்தி இருக்க மாட்டோம். ஆனால் கே எல் ராகுலை இந்திய அணி அனைத்து இடத்திலும் பயன்படுத்துகிறது. ஒரு சமயம் அவரை விக்கெட் கீப்பராக பயன்படுத்துகிறது."
"சில சமயம் நம்பர் ஆறாவது பேட்ஸ்மேன் ஆக பயன்படுத்துகிறது. சில சமயம் அதே ராகுல் தொடக்க வீரராக களமிறங்குகிறார். இதனை தொடர்ந்து பார்டர் கவாஸ்கர் தொடரில் நம்பர் மூன்றாவது வீரராக களம் இறங்குகிறார். அடுத்த போட்டியிலே மீண்டும் அவரை தொடக்க வீரராக பயன்படுத்துகிறார்கள். நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்."
"ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக விளையாடுவது என்பது மிகவும் சுலபமான பணி. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதே பணியை செய்வது என்பது மிகவும் கடினம். கே எல் ராகுல் தன்னலமற்ற வீரராக விளங்குகிறார்" என்று சித்து பாராட்டியுள்ளார். இந்த நிலையில் கே எல் ராகுல் அரை இறுதி போட்டியில் சிக்சர் அடித்தது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கிறது.
இதன் மூலம் அவர் பயன்படுத்த பேட் தற்போது பிரபலமாக இருக்கிறது. கேஎல் ராகுல் பயன்படுத்திய பேட் உத்திர பிரதேச மாநிலம் மீருட் சேர்ந்த ஒரு நிறுவனம் செய்தது என தற்போது தெரியவந்திருக்கிறது. இது குறித்து அந்த பேட் தயாரிப்பு நிறுவனரான அனுஜ் குமார், "இந்திய கிரிக்கெட் அணியில் 90 சதவீதம் வீரர்கள் மீரூட்டில் தயாரிக்கப்பட்ட பேட்டில் தான் பயன்படுத்துகிறார்கள்."
" குறிப்பாக அரையிறுதியில் கேஎல் ராகுல் இரண்டு சிக்சர் ,இரண்டு பவுண்டரிகள் அடித்து 42 ரன்கள் சேர்த்தார். அதில் அவர் பயன்படுத்த பேட்டும் எங்கள் நிறுவனத்துடையது தான். எங்களுடைய பேட்டை பயன்படுத்தி இந்திய அணி வீரர்கள் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்துவார்கள் என நாங்கள் நம்புகிறோம்."
"எங்கள் நிறுவன பேட்டிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் எங்களுடைய பேட்டை பயன்படுத்தும் போது அது எங்களுடைய நகரத்திற்கே பெருமையாக இருக்கின்றது.
ராகுல் அடித்த சிக்சர் எங்கள் நிறுவன பேட்டிற்கு ஒரு பெயரையே பெற்று தந்திருக்கிறது என்று சொல்லலாம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று அவர் கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் எஸ் ஜி மற்றும் எஸ் எஸ் போன்ற பேட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.இது அனைத்தும் உத்தரபிரதேச மாநிலம் மீருட்டில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.